Monday, June 28, 2010

ரேப் ட்ராகன் - 9


சீன அழகி ஸிங்ஸிங்

பிரபஞ்ச சொர்க்கம் என்று செல்லப் பெயர் சொல்லி அழைக்கப்படும் குத்து நகரின் குத்துக் கார்னரின் இன்ப விடுதிகளும், அவற்றின் அழகிகளும், அந்த அழகுப் பதுமைகள் தம்மைத் தேடி ஆசையுடன் ஓடி வரும் வாடிக்கையாளர்களிற்கு வழங்கும் சேவைகளும் பிரபஞ்சப் புகழ் பெற்றவை. தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல.

இந்த இன்ப விடுதிகள், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும், அவர்கள் சுருக்குப் பைகளில் காசுகள் நிரம்பியிருக்கும் பட்சத்தில் இரு கரம் விரித்து வாஞ்சையுடன் வரவேற்றன. பல தேச அழகிகளின் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கு பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் இன்பவிடுதி ஒன்றில் மெனு அட்டை பாவனையை அறிமுகம் செய்து புரட்சி செய்தவள்தான் சீன அழகி ஸிங்ஸிங்.

ஸிங்ஸிங்கின் விடுதியின் முன்பாக இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு……. 150 பொற்காசுகள் என்ற ஒரு பெரிய அட்டை தொங்கியது. அட்டையில் பெரிதாக அழகி மெகான்நரி கண்ணடித்துக் கொண்டிருந்தாள். அழகி மெகான்நரியின் உடல் கூறுகளின் முக்கிய பாகங்களில் கறுப்பு வட்டங்கள் அராஜகம் செய்தன.

சீன அழகியின் இன்ப விடுதியினுள் வழமை போலவே கூட்டம் கொண்டாட்டமாகவிருந்தது. கடற்கொள்ளையர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், வணிகர்கள், ராஜதந்திரிகள், கலைஞர் பெருமான்கள் என பல சீமான்கள் விடுதியில் தமக்கு இஷ்டமான இன்பங்களை சுகித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

முரட்டுக் கூச்சல்கள், இன்ப முனகல்கள், வாந்தி ஒலிகள், போதைக் கத்தல்கள் என்பன விடுதியின் ஒத்திசையாக ஒலித்தன. விடுதியின் ஆழமான பகுதியில் பிரத்தியேக வாடிக்கையாளர்களிற்கான பகுதி அமைந்திருந்தது. சீன அழகி ஸிங்ஸிங்கின் வடிகட்டலின் பின்பாகவே பிரத்தியேக வாடிக்கையாளர்கள் பகுதிக்குள் ஒருவர் நுழைய முடியும்.

பிரத்தியேகப் பகுதியின் ஓரத்தில் நீண்ட ஒரு பார் அமைந்திருந்தது. பலவகையான மதுவகைகளையும் வாடிக்கையாளனின் ரசனைக்கேற்ப அது பரிமாறியது. பாரில் தனியே அமர்ந்து ஒரு மனிதன் பிரெஞ்சு ஒயினைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு வட்டமான பஞ்சணை மீது ஒரு சீனப் பதுமையும், ஒரு சீனனும் இருந்தார்கள். அவர்களின் உடல்களில் பொட்டுத்துணிகூட இருக்கவில்லை.

சீன அழகியின் வாளிப்பான மார்புகள், மலரத்துடிக்கும் தாமரைகளை ஒத்திருந்தன. அவள் ஒடுங்கிய கண்களிலிருந்து போதை மேகம்போல் வினியோகமானது. அவளது அழகிய கரங்களின் விரல்கள் பஞ்சணையில் அவளிற்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த சீனனின் முதுகில் ஆழமான கோடுகளை இழுத்தன.

இப்போது அந்த சீனப் பைங்கிளி தன் உடலை மெதுவாக சீனனை நோக்கி சாய்த்தாள், தாமரை மொட்டுக்களின் நுனிகள் சீனனின் முதுகை ஸ்பரிசித்தன. சீனனின் முதுகில் மேலிருந்து கீழ் நோக்கி தாமரைகள், நீரில் அசைந்து வருவதுபோல் அசைந்து சென்றன.

- ஸிங்ஸிங்… அழகிக்கு முதுகைக் காட்டியபடியே கிடந்த சீனனின் குரல் மெதுவாக ஒலித்தது.

- சொல்லுங்கள் ஷங்லிங்… சீன அழகி ஸிங்ஸிங்கின் குரலில் அமிர்தம் நனைந்திருந்தது.

- உன் விரல்களில் மந்திரமிருக்கிறது ஸிங்ஸிங்.

சீனன் கூறியதைக் கேட்டு க்ளுக்கென்று சிரித்தாள் சீன அழகி. கொஞ்சம் நாணப்பட்டவாறே… அவை விரல்கள் அல்ல ஏன்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள். இதனை எண்ணுகையில் அவள் முகம் செக்க சிவந்திருந்தது. ஆனால் பதிலுக்கு

- உங்கள் உடல் அந்த மந்திரத்தை விழிக்க வைக்கிறது.. என்றாள் தன் குரலில் மேலும் குழைவைக் கூட்டி. இதைக் கூறிய ஸிங்ஸிங்கின் தாமரை மொட்டுக்கள் சீனன் ஷங்லிங்கின் இடுப்பிற்கு கீழ் இறங்கின, அவன் பின்னழகுகள் மேல் வட்ட வட்டக் கோலங்களை இட்டன. இது போதாது என்று சீன அழகியின் கைவிரல்களும் சீனனின் இடுப்பின் முன்பகுதியை நோக்கி தம் பயணத்தை ஆரம்பித்தன.

-க்ர்ர்ர்ர்ர்ர்….. என்று மலைவேங்கைபோல் உறுமினான் ஷங்லிங். உறுமுவதோடு நின்றுவிடாது தன் உடலை திருப்பவும் செய்தான். அவன் மார்பில் பல வெட்டுக் காயத் தழும்புகள் இருந்தன. முதுகில் இருந்த காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை எண்ணி சீனப் பதுமை ஸிங்ஸிங் வியந்தாள்.

பளபளத்த தன் மொட்டைத் தலையை தடவிய சீனன் ஷங்லிங், தன் தொங்கு மீசையை நீவினான். மெல்லிய உடல்வாகு கொண்ட சீனனின் எலும்புகள் முறுக்கேறி இருந்தன. இரும்பை ஒத்த அவன் வயிற்றுப் பகுதியில் சொர்க்கத்தின் முகவரி என்ற வார்த்தைகள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அவ்வார்த்தைகளின் கீழிருந்து ஆரம்பித்த ஒரு அம்புக்குறி இடைக்கு கீழே ஆழமான ஒரு இடத்தை நோக்கி நீண்டது.

- நீங்கள் ஒரு வல்லவர்…. ஸிங்ஸிங்கின் குரல் குழைந்தது, அவள் விரல்கள் சொர்க்கத்தின் முகவரியை தேடின.

- எதில் வல்லவன் அழகியே.. சீனன் முனகினான்.

- உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் என்று பதிலளித்த ஸிங்ஸிங் சொர்க்கத்தின் முகவரியை சுட்டிக் காட்டினாள்.

- அது ஒரு கலை, அழகியே என்று ஆரம்பித்த சீனனின் குரலை… ஹாஹாஹா என்ற ஒரு பெரும் சிரிப்பு வெட்டியது.

பாரில் அமர்ந்திருந்து பிரெஞ்சு ஒயினைப் பருகிக் கொண்டிருந்த மனிதன் சிரித்த சிரிப்பு சீனனிற்கு எல்லையற்ற கோபத்தை தந்தது.

- எதற்காக சிரிக்கிறாய் நீ ? என்றான் சீனன் கோபமாக.

- இல்லை.. சொர்க்கத்தின் முகவரியில் ஒரு கட்டெறும்பு இருக்கிறது.. சிரித்தபடியே கூறினான் அம்மனிதன். அவன் பச்சைக் கண்களில் குறும்பு கொப்பளித்தது.

பஞ்சணையிலிருந்து வேங்கையென துள்ளி எழுந்தான் சீனன் ஷங்லிங். எழுந்த வேகத்திலேயே பாரை நெருங்கிய சீனன் தன் கைகளை முறுக்கி பச்சைக் கண்ணனின் கழுத்தை நோக்கி இறக்கவும் தயாரானான். அந்த அடி மட்டும் பச்சைக் கண்ணனின் கழுத்தில் இறங்கியிருந்தால் இந்த தொடரிற்கு நிறைவு இந்த அத்தியாயத்துடனேயே கிட்டியிருக்கும் ஆனால் விதி வலியது.

- யாராடா இங்கே…. என்று தன் முரட்டுக் குரலில் இரு பெயர்களை ஓங்கி உச்சரித்தவாறே விடுதியின் பிரத்தியேகப் பகுதிக்குள் காட்டெருமைபோல் நுழைந்தான் நாசக்குத்து நாவலன். நாவலன் வாயிலிருந்து வந்து சிதறிய பெயர்களைக் கேட்ட சீனன் ஷங்லிங்கும், பச்சைக் கண்ணனும் நாவல் வண்ண வேதாளம் போல் நின்ற நாசக்குத்து நாவலனை வெறித்துப் பார்த்தார்கள்.

[தொடரும்]

Thursday, June 24, 2010

Aய்சலக்கா டீம்


அமெரிக்க ராணுவத்தின் அதிரடிப்படைத் துருப்புக்களில் அசகாய சூரர்களாக செயற்பட்டு வருகிறது ஒரு நால்வரணி. Hannibal [Liam Neeson] என்பவன் தலைமையில், Face [Bradley Cooper] , B.A [Quinton Jackson], Murdock [Sharlto Copley] எனும் மூவர் இணைந்து செயற்பட்டு வரும் இக்குழு A – Team என்று அழைக்கப்படுகிறது.

ஈராக் யுத்தத்தில், ஜெனரல் மாரிசன் எனும் அதிகாரியின் கீழ், தம் ஆற்றல்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி செயற்பட்ட இந்த நால்வரணி, தம் சேவை முடிந்து நாடு திரும்பவுள்ள நிலையில் CIA அமைப்பைச் சேர்ந்த Lynch [Patrick Wilson]எனும் நபர் ஹனிபலை வந்து சந்திக்கிறான்.

பாக்தாத்திலிருந்து மிக ரகசியமாக போலி டாலர் நோட்டுக்கள் பெருந்தொகையாக சதாமிற்கு நெருங்கியவர்களால் கடத்தப்படவுள்ளதை ஹனிபலிற்கு தெரிவிக்கிறான் சிஐஏ அதிகாரியான லின்ச். இப்போலி டாலர் நோட்டுக்களால் விளையக்கூடிய தீங்குகள் குறித்தும் ஹனிபலிற்கு விளக்குகிறான் அவன்.

யாரும் அறியாத வண்ணம், ஹனிபல் குழுவினர் பாக்தாத்திற்குள் நுழைந்து, போலி டாலர் நோட்டுக்களை எடுத்துச் செல்லும் கொள்கலனை வழியில் மடக்கி, கைப்பற்றி வரவேண்டுமென ஹனிபலிடம் கேட்டுக் கொள்கிறான் சிஐஏ அதிகாரியான லின்ச்.

இதனையடுத்து ஜெனரல் மாரிசனுடன் லின்ச் கூறியது குறித்து கலந்தாலோசிக்கும் ஹனிபல், ஏ- டீம் பாக்தாத்திற்குள் நுழைய அவர் அனுமதிக்க வேண்டுமென வேண்டுகிறான். முதலில் இத்திட்டத்திற்கு ஆதரவு தர மறுக்கும் ஜெனரல் மாரிசன், பின் அரை மனதுடன் இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இந்த திட்டமானது, ஹனிபல் குழு, சிஐஏ அதிகாரி லின்ச், ஜெனரல் மாரிசன் ஆகியோர் மட்டுமே அறிந்த ஒரு திட்டமாக செயற்படுத்தப்படுகிறது.

l-agence-tous-risques-2010-6677-1103997864 குறித்த ஒரு இரவில், அருமையான திட்டமிடல் ஒன்றின் உதவியுடன் பாக்தாத் நகரில் புகுந்து, போலி டாலர் நோட்டுக்களை கடத்திச் செல்லும் கொள்கலனை அபகரித்து, ஜெனரல் மாரிசனின் தளத்திற்கு எடுத்து வருகிறது ஹனிபல் குழு. வெற்றிகரமாக இத்திட்டத்தை நிறைவேற்றிய ஹனிபல் குழுவை வரவேற்க வரும் ஜெனரல் மாரிசன், அவர் பயணிக்கும் வண்டியில் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

ஹனிபல் குழுவினர் பாக்தாத்தில் இருந்து கைப்பற்றி வந்திருந்த போலி டாலர் நோட்டுக்களை கொண்ட கொள்கலனும் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. ஆனால் அந்த கொள்கலனில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி டாலர் நோட்டுக்களை அச்சடிக்கும் தகடுகளை அமெரிக்க ராணுவத்தில் செயற்பட்டுவரும் Black Forest எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கையகப்படுத்திக் கொண்டு மறைந்து விடுகிறார்கள்.

ஜெனரல் மாரிசனின் கொலை, மற்றும் போலி டாலர் நோட்டு அசம்பாவிதம் குறித்து நடாத்தப்படும் ராணுவ நீதி விசாரணையில், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஹனிபல் குழுவினர் அனைவரினதும் ராணுவ பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இதனையடுத்து ஹனிபல் குழுவைச் சேர்ந்த நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

ஹனிபல் குழுவிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆறு மாதங்களின் பின், சிறையிலிருக்கும் ஹனிபலை மிக ரகசியமான முறையில் வந்து சந்திக்கிறான் சிஐஏ அதிகாரி லின்ச். ஹனிபலும், அவன் குழுவினரும் சிறையில் வாடக் காரணமான பிளாக் ஃபாரஸ்ட் குழுவின் தலைவன் Pike குறித்த சில தகவல்களை ஹனிபலிற்கு தருகிறான் சிஐஏ அதிகாரி லின்ச்…..

l-agence-tous-risques-2010-6677-976880361 பின் ஹனிபல் குழுவினர் எவ்வாறு சிறையில் இருந்து தப்பி, ஜெனரல் மாரிசன் கொலை மற்றும் கள்ள டாலர் நோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அம்பலப்படுத்துகிறார்கள் என்பதை கலகலப்பும் ஆக்‌ஷனும் கலந்து திரையில் கூறுகிறது The A – Team திரைப்படத்தின் மீதிக் கதை.

ஏ டீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியபோது, வழமை போலவே இன்னொரு சொதப்பல் இதோ என்ற எண்ணமே மனதை ஆக்கிரமித்தது. எனவே திரைப்படத்தைக் காணச் சென்ற போதும் அது குறித்த அதிக எதிர்பார்ப்புக்களை நான் கொண்டிருக்கவில்லை. ஆனால்… ஆச்சர்யம்! ஆச்சர்யம்!

1980களில் புகழ் பெற்றிருந்த ஒரு தொலைக்காட்சித் தொடரை அதே பெயரில் திரைக்கு வெற்றிகரமாகக் கடத்தியிருக்கிறார்கள். காதில் பூ வைப்போர் சங்க ஆக்‌ஷன்களை, நகைச்சுவை கலந்து வழங்கி ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைப்பதில் சிறப்பான வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் Joe Carnahan.

ஏ டீமில் இடம்பெறும் ஹனிபல், ஃபேஸ், பிஏ, மற்றும் மெர்டொக் ஆகிய பாத்திரங்களை கலகலப்பு நிறைந்ததாக உருவாக்கி அப்பாத்திரங்களை ரசிகர்கள் மனதில் எளிதில் ஒட்டிக் கொள்ளச் செய்து விடுகிறார்கள். குறிப்பாக மிகவும் முரடனாக அறியப்பட்ட பிஏ பாத்திரம் சிறைத்தண்டனையின் பின் அமைதியின் உருவாக மாறி வருவது நன்றாக பொருந்திப் போகிறது. வாயில் சுருட்டைக் கடித்தபடியே கெட்ட கெட்ட திட்டம் தீட்டும் ஹனிபல் வேடத்தில் லியம் நீஷன் அழகாக செய்திருக்கிறார். அட்டகாசமான சிரிப்பு அவருடையது. உச்சக்கட்ட ஆக்‌ஷனில் கொள்கலன் ஒன்றிற்குள் அவர் போடும் சிறு ஆக்‌ஷன் தூள் மாமே தூள்.

l-agence-tous-risques-2010-6677-1970485591 பிளேபாய் ஃபேஸ், தடிமுரடனாக இருந்து சாந்த சொரூபியான பிஏ, தன் கிறுக்கு விளையாட்டுக்களால் கலகலப்பாக உலாவரும் மெர்டொக் என அப்பாத்திரங்களை ஏற்றிருக்கும் நடிகர்கள் யாவரும் அருமையான தெரிவு. பாத்திரங்களை உணர்ந்து கலகலப்பும், களிப்புமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் நடிகர்கள்.

குறிப்பாக பிஏவும், மெர்டொக்கும் பின்னியிருக்கிறார்கள். விமானத்தில் பிஏ ஏற மறுப்பதும். தூக்க மருந்து தந்து விமானத்தில் பயணம் செய்யும் பிஏ கண்விழிக்கும்போது அடிக்கும் கூத்துக்களும் சிரிக்க வைக்கின்றன. அழகான மங்கை ஜெசிக்கா பியல் அவர்களின் பாத்திரம் ஒரு டோட்டல் வேஸ்ட் என்பதை இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. பிளாக் ஃபாரஸ்ட் அமைப்பின் தலைவனாக வரும் Pikeன் வில்லத்தனங்கள் அட்டகாசம்.

படத்தில் இடம்பெறும் பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் காதில் பூச்சுற்றும் ரகம். ஆனால் இவ்வகையான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாது ஏ டீமை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி. ஹனிபல் அறிமுகமாகும் ஆரம்ப ஆக்‌ஷன் காட்சி, பிராங்பர்ட்டின் வங்கி கட்டிடங்களில் நிகழும் அசர வைக்கும் ஆக்‌ஷன் காட்சி என்பன அபாரம். மாறாக இறுதி ஆக்‌ஷன் சிறிது ஏமாற்றத்தை தருகிறது. வானிலிருந்து கீழே விழும் டாங்கியில் நடக்கும் ஆக்‌ஷன் ஹிஹிஹி்!!!! படத்தில் கூடவே ஓடிவரும் ஜாலியான நகைச்சுவை, காதில் பூச் சுற்றல்களை புறந்தள்ள உதவுகிறது. சிஐஏ குறித்த கிண்டல்களை தயக்கம் காட்டாது அங்காங்கே அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

லாஜிக்கெல்லாம் பார்த்து மண்டையை உடைக்காமல், ஜாலியாகப் பார்த்து, ரசித்து, வாய்விட்டு சிரித்து அழுத்தங்களை ஒரு கணம் மறப்பதற்கு உதவும் இந்த ஏ டீம் ஒரு ஜாலி Aய்சலக்கா டீம். [**]

ட்ரெயிலர்

Monday, June 21, 2010

ரேப் ட்ராகன் - 8


நாசக்குத்து நாவலன்

குத்து நகர் இன்பக் குத்துக்களிற்கும், கேளிக்கைகளிற்கும் மட்டும் பெயர்பெற்றது அல்ல. அங்கு பல கில்லாடிகளும் தமது சாகச வாழ்க்கைகளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கில்லாடிகளில் சிறந்தவர்களில் ஒருவனாக நாசக்குத்து நாவலன் குத்து நகர குடிசனங்களினால் கணிக்கப்படுகிறான்.

நாவலன் குடும்பத்தில் சந்ததி சந்ததியாக ஆண் வாரிசுகள் அனைவரிற்கும் நாவலன் என்ற பெயரே நிலைத்து நின்றது. நாவலனின் முன்னோர்களில் ஒருவர் நாவல் மரம் ஒன்றின் கீழ் எடுத்த சபதத்தின் பின்பாக ரவுடித்தனம் செய்வதே அவர்கள் குல வழக்கமாகி விட்டிருந்தது.

நாவலன்களின் சிறப்பம்சம் அவர்கள் தம் உடல் மேல் பூசியிருக்கும் வண்ணப் பூச்சு ஆகும். தலையை முழு மொட்டை போட்டுக் கொண்டு உடல் பூராவும் நாவல் வண்ணத்தைப் பூசியிருப்பார்கள். கண்கள் இருக்குமிடத்தில் வெள்ளை வண்ணம் இட்டிருப்பார்கள். வெள்ளை வண்ணத்தை ஒரு கறுப்புக் கோடு நீள் வட்டமாக சூழ்ந்திருக்கும்.

உடலின் நாவல் வண்ணப் பூச்சிற்கேற்ப இடுப்பில் ஒரு கறுப்புக் கச்சையை நாவலன்கள் அணிந்திருப்பார்கள். கச்சையின் முன் பக்கத்தில் அங்கே!! ஆம் அங்கேதான்.. ஒரு நாவல்பழ இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும். கச்சையின் இரு புறமும் உள்ள உறைகளில் இரு குறுவாள்கள் அபாயமாக தொங்கியவண்ணம் இருக்கும். சில வேளைகளில் தொலைவில் இருந்து பார்ப்பவர்களிற்கு மூன்று குறுவாள்கள் தோற்றமளிக்குமாற்போல் இருக்கும். ஆனால் அருகில் வருகையில் குறுவாள்கள் இரண்டுதான் என்பதை அறிந்து தெளியலாம்.

தம் உடலின்மீது பூசப்பட்ட வண்ணப்பூச்சிற்கு சேதம் ஏற்படும் எனும் காரணத்தால் நாவலன்கள் தம் உடல்மீது நீர் படுவதை வெறுத்து வந்தார்கள். ரவுடித்தனம் செய்தாத நாட்களில், நாவலன்கள் அழகான மேலங்கியும், தலைப்பாகையும் அணிந்து நகரில் சீமான் போல் வலம் வருவதும் உண்டு.

நாவலன்கள் தங்குமிடம் நாவற்பழ வடிவில் அமைந்திருக்கும். அதேபோல் நாவலன்கள் விரலில் அணிந்திருக்கும் மோதிரங்களிலும் நாவற்பழ சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். யாராவது நபர்களின் வதனங்களில் நாவற்பழ முத்திரை பதிந்து இருப்பதைக் கண்டால் அவர்கள் நாவலன்களிற்கு முகம் கொடுத்தவர்கள் என்பது புரிந்துவிடும். இதனால் நாவற்குத்து நாவலன்கள் என்ற பட்டப்பெயர் இவர்களிற்கு கிடைத்திருந்தது. இதுவே கால ஓட்டத்தில் மருவி நாசக்குத்து நாவலனாகியது.

நாவற்பழ மரங்களால் சூழ்ந்திருந்த தனது நாவல்பழ வடிவ தங்குமிடத்தில், சமகால நாவலன் தனது புரவி கேசரியோடும், தனது கடிநாய் உப்புமாவுடனும் நாவற்பழ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது அவனது உதவியாளன் நாவல் குள்ளன், இளவரசன் இலுமினாட்டியிடமிருந்து வந்திருந்த ஓலையை நாவலனிடம் பவ்யமாகத் தந்தான்.

இளவரசன் இலுமினாட்டியிடம் இருந்து வந்த ஓலையைப் படித்த நாவலன், தன் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தான். தனது உடலை அப்படியும் இப்படியுமாக அசைத்து சில அப்பியாசங்களை நாவலன் செய்தான். அவன் நாவல் வண்ண உடலில் தசைகள் விம்மின. தன் எஜமானன் நாவலனின் உடல் அழகை பார்த்து பெருமிதம் கொண்ட நாவல் குள்ளன், மத்தளம் ஒன்றை எடுத்து தட்ட ஆரம்பித்தான். டம்மு டம்மு டம்மு என்ற ஓசை நாவல் மரங்களை அணைக்க ஆரம்பித்தது.

நாவல் குள்ளனின் மத்தள வாசிப்பிற்கேற்ப தன் உடலை ஆட்டியும் அசைத்தும் நாவலன் தன் தேகப் பயிற்சியை தொடர்ந்தான். கால்களை உதைத்தான். கைகளால் வெட்டினான். மத்தள ஓசைக்கு பக்கவாத்தியம்போல் கடிநாய் உப்புமா வவ்வவ்வவ் என்றது. நடந்து கொண்டிருக்கும் களேபரத்தைக் கண்ட புரவி கேசரி… அய்யோ வேலை வரப் போகிறதே என துணுக்குற்று அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. இதைக் கண்ட நாவலன் காற்றில் குத்துக்களை விட்டவாறே கேசரியை துரத்த ஆரம்பித்தான். அவன் வாய்லிருந்து உய்ய்ய் என்ற சீழ்க்கை ஒலி தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருக்க, கேசரி காது கேட்காதது போல் வேகமாக ஓடிச் சென்றது.

[நாவலன் குத்து... நாசக்குத்து]

Thursday, June 17, 2010

இளவேனில் யுத்தங்கள்


கென்ஜி, கணிதத்தில் அசாத்திய திறமை கொண்ட ஒரு கல்லூரி மாணவன். ஒஸ் [OZ] எனப்படும் இணைய மெய்நிகர் யதார்த்த உலகில் [Virtual Reality World] அங்கம் வகிப்பதுடன் ஒஸ் உலகின் பராமரிப்பு விடயங்களிலும் அவன் பங்கேற்று வருகிறான்.

ஒஸ், உலகெங்கிலும் உள்ள பல கோடி அங்கத்தினர்களை அவதார் வடிவில் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இணையம், தொலைபேசி, என்பவற்றின் வழியாக ஒஸ் உலகுடன் ஒருவர் இணைந்து கொள்ள முடியும். ஒஸில் பல்நாட்டு பெரு நிறுவனங்களும், நிர்வாக அமைப்புக்களும் கூட அங்கம் வகிக்கின்றன.

கென்ஜியின் கல்லூரியில் கல்வி பயிலும் அழகிய மாணவியான நட்சுகி, இளவேனில் கால விடுமுறையின்போது தனக்காக பணியாற்றும் வாய்ப்பை கென்ஜிக்கு வழங்குகிறாள். மிகவும் ஆர்வத்துடன் நட்சுகிக்காக வேலைபார்க்க சம்மதிக்கும் கென்ஜி இதற்காக நட்சுகியின் பாட்டி வாழ்ந்து வரும் ஊரிற்கு பயணமாகிறான்.

நட்சுகியின் பாட்டி வாழ்ந்து வரும் பசுமையான ஊரை அடையும் கென்ஜி, நட்சுகியின் பாட்டிக்கு விரைவில் 90 வயது பூர்த்தியாக இருப்பதையும், அதற்காக ஒரு சிறப்பு பிறந்ததின விருந்து ஏற்பாடாகியுள்ளதையும் அறிந்து கொள்கிறான். நட்சுகியின் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் இந்த விருந்திற்காக பாட்டியின் பழமைவாய்ந்த பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடுகிறார்கள்.

தக்க தருணமொன்றில் கென்ஜியை தன் பாட்டிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் நட்சுகி. கென்ஜி தன் காதலன் எனவும், எதிர்காலத்தில் அவனையே தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் நட்சுகி, பாட்டிக்கு அறிவிக்கிறாள். மேலும் கென்ஜி அமெரிக்கா சென்று கல்வி கற்றவன் எனவும், ஒரு கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் பாட்டியிடம் அடுக்குகிறாள். இந்த அறிமுகம் கென்ஜிக்கு அதிர்ச்சியை தருகிறது.

summer-wars-2010-19781-895596730 தன் பாட்டியின் உடல் நலம் மோசமாக இருந்த ஒரு சமயத்தில்,பாட்டியின் உடல் நலம் தேறுவதற்காக தான் சொன்ன ஒரு பொய்யே, தான் இப்போது ஆடும் நாடகத்திற்கு காரணம் என்பதை கென்ஜிக்கு புரிய வைக்கிறாள் நட்சுகி. முதலில் தயங்கினாலும் நட்சுகியின் காதலனாக சில நாட்கள் நாடகமாட சம்மதிக்கிறான் கென்ஜி.

கென்ஜியின் பெற்றோர்கள் வேலையே கதி என்று ஓடுபவர்கள். இந்தக் காரணத்தால் கென்ஜிக்கு குடும்பம் ஒன்றின் அன்பான அரவணைப்பு இல்லாமல் வளரவேண்டிய கட்டாயம். தனிமை உணர்வுடன் வாழ்ந்து வந்த கென்ஜிக்கு, ஏராளமான உறவினர்களைக் கொண்ட நட்சுகியின் குடும்பம் மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் அளிக்கிறது. தன் நாட்களை இனிமையாக கழிக்க ஆரம்பிக்கிறான் கென்ஜி. ஆனால் ஒஸ் உலகில் கென்ஜியின் அவதாரை உபயோகித்து உள்ளே நுழைந்த ஒரு தீயசக்தி, அந்த உலகை ஹேக்[Hack] செய்துவிடுகிறது.

ஒஸ் தாக்கப்பட்ட நிகழ்வு ஜப்பானில் பரபரப்பான செய்தியாகிவிடுகிறது. கென்ஜிதான் இந்த பாதகச் செயலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது. தொலைக்காட்சியில் கென்ஜியின் போட்டோவை தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கென்ஜி குறித்த உண்மையான விபரங்களை நட்சுகியின் குடும்பம் அறிந்து கொள்கிறது. நட்சுகியின் காதலன் என கென்ஜி ஆடும் நாடகமும் முடிவிற்கு வருகிறது. கென்ஜியிடம் அன்பும், பரிவும் காட்டி மகிழ்ந்த நட்சுகி குடும்பத்தினர் அவனை வெறுக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒஸ் உலகில் புகுந்த செயற்கை அறிவாண்மையான [Artificial Intelligence] லவ் மெஷின், தன் மோசமான நடவடிக்கைகளை அவ்வுலகில் தொடர்கிறது. இதனால் பல மக்களின் சாதாரண நாள் வாழ்கை பாதிப்படைகிறது. ஜப்பானின் பல நகரங்களில் குழப்ப நிலை உருவாகிறது. தேசத்தின் மீது அதிகப்பற்றுக் கொண்ட நட்சுகியின் பாட்டி, நாட்டில் உருவாகிய குழப்ப நிலையை எவ்வழியிலாவது தீர்த்து வைக்க வேண்டுமென விரும்புகிறாள். ஆனால் தொடரும் சில சம்பவங்களினால் தன் பிறந்த தினத்திற்கு முன்பே அவள் இறந்து போகிறாள்.

summer-wars-2010-19781-152714463 பாட்டியின் மரணம் அவர் வீட்டில் மகிழ்ந்திருந்த எல்லோரையும் பாதிக்கிறது. நட்சுகியின் பாட்டியின்மீது மிகவும் மதிப்பு கொண்டிருந்த கென்ஜி, பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நட்சுகியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஒஸில் நுழைந்துவிட்ட லவ் மெஷினை ஒழித்துக்கட்டுவது என முடிவெடுக்கிறான். ஆனால் லவ் மெஷினோ உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் வகையில் தன் காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறது…..

Mad House Studio வால் தயாரிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமான Summer Wars, இன்றைய உலகில் வேகமாக அர்த்தமிழந்து கொண்டிருக்கும் குடும்ப உறவுகள், அன்பு நிறைந்த சொந்த பந்தங்கள் என்பவற்றின் அவசியம் குறித்து பேசவிழைகிறது. வேறுபாடுகளை புறந்தள்ளி, ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதன் மூலமே தடைகளை வெற்றிகரமாக கடக்கலாம் என்பதனையும் உணர்த்த முற்படுகிறது. இயக்குனர் Mamouru Hosoda திரைப்படத்தை திறமையாக இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் அதில் அடாது நிறைந்திருக்கும் இளமை உணர்வு. மேலும் அந்த உணர்வுடன் கைகோர்க்கும் குறும்பு மற்றும் நகைச்சுவை என்பன படத்தை பார்ப்பவர்களை இளமையாக உணர வைக்கின்றன அல்லது இளமையை எண்ணி ஏங்க வைக்கின்றன. அனிமேஷனில் கூட இளமை ஆட்டம் போடுகிறது. ஒஸ் உலகின் அறிமுகம், கென்ஜி மற்றும் நட்சுகி ஆகியோர் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சிகளில் இளமையின் பசுமை மனங்களை வருடிக் கொடுக்கிறது. இளமையான வேகத்தில் பறக்கிறது படம்.

summer-wars-2010-19781-531171158 நட்சுகியின் பாட்டி வீட்டில் கென்ஜி சந்திக்கும் பாத்திரங்கள் சுவாரஸ்யமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கென்ஜியையும், நட்சுகியையும் குடும்ப அங்கத்தினர்கள் கலாய்க்கும் காட்சிகள் ஜாலியான கலகலப்பு. குறும்பு செய்வதையே கடமையாகக் கொண்ட வாண்டுகள், தன் குடும்பத்தின் வீரபிரதாபம் பற்றி பேசும் மாமா, போர்க்குணம் கொண்ட சிறுவன் கசுமா, நட்சுகியை தன்னிடம் இருந்து அபகரித்து விட்டான் என கென்ஜி மீது கோபமாக இருக்கும் பொலிஸ் மச்சான் என ரசிக்க வைக்கும் பாத்திரங்கள் திரைக்கதையை அலங்கரிகின்றன. பாட்டிக்கும் அவளது அமெரிக்க ரிட்டர்ன் பேரனிற்குமிடையில் இருக்கும் அன்பு வெளிப்படும் தருணத்தில் அழகின் மென்மை சாரலாக எட்டிப் பார்க்கிறது. அதேபோல் மனதை நெகிழ வைக்கும் கவித்துவமான காட்சிகளும் படத்தில் உண்டு.

இருப்பினும் ஒஸ் உலகில் ஏற்படும் அசம்பாவிதங்களிற்கும், பாட்டியின் மரணத்திற்குமிடையில் திரைப்படத்தின் வேகம் கணிசமான அளவு குறைந்து விடுகிறது. ஒஸ் உலகில் அவதார்களிற்கு இடையில் நிகழும் போட்டிகளும், மோதல்களும் படத்தின் இறுதிப்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இது இளம் தலைமுறைக்கு உவப்பானதாக அமைந்தாலும், ஜப்பானிய அனிமேஷன் படங்களிற்குரிய அபாரமான கற்பனை வளத்திலிருந்து ஒரு படி இறங்கிய உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Summer Wars திரைப்படம் Miyazaki ன் திறமையில் மயங்கிக் கிடக்கும் நெஞ்சங்களை முழுமையாகத் திருப்திப்படுத்தாத போதிலும் கூட, அதிலிருக்கும் இளமையாலும், அன்பாலும் அவர்களை சற்றுக் கவர்ந்து விடவே செய்கிறது. [**]

ட்ரெயிலர்

Monday, June 14, 2010

ரேப் ட்ராகன் - 7


குத்தலகேசியின் கண்ணீர்

அபசகுனம் என்று கூறியவாறே தன் நீண்ட கால்களை எட்டி வைத்து விரைவாக நடக்க ஆரம்பித்த இளவரசன் இலுமி, அங்காங்கே தன்னைக் கடந்து சென்ற அரண்மனை பணிப்பெண்களைப் பார்த்து தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே நடந்தான். அவன் கண் சிமிட்டலிற்கு கிடைத்த பதில்கள் காஸனோவாவையே பொறாமைப்பட வைப்பதாக இருந்தன.

மந்திராலோசனை மண்டபத்தை அடைந்த இளவரசன் இலுமி, தந்தை குத்தலகேசியை வணங்கினான். மந்திரியைப் பார்த்து தலையை அசைத்தான். மந்திரவாதி கருந்தேளைக் கண்டு விட்டு… பாஸ், நீங்கள் இங்கு என்ன செய்கீறீர்கள்… என்றான்.

தன் மதுக் கிண்ணத்திலிருந்து உதடுகளைத் திருப்பி மந்திரவாதி கருந்தேள் பதிலளிப்பதற்கு முன்பாக குத்தலகேசியின் சிம்மக் குரல் கர்ஜனையாக எழுந்தது.

- லுமினாட்டி

- ந்தையே

- உன்னிடம் ஒரு முக்கிய விடயத்தை ஒப்படைக்கப் போகிறேன்… என்றவாறே மந்திரி குத்துப் பிடியைப் பார்த்த மன்னன் குத்தலகேசி, வெறுமையாகவிருந்த தன் மதுக் கிண்ணத்தை மந்திரியிடம் நீட்டினார்.

- விடயமா?! என்ன விடயம் தந்தையே?

- அரண்மனைக்கு இருவரை நீ இட்டு வர வேண்டும் மகனே.

- அதற்கு நானெதற்கு தந்தையே, இந்த அரண்மனை எங்கும் மந்திரி குத்துப்பிடி போல் வெட்டி வேலையாட்கள் நிறைந்திருக்கிறார்களே!!

இளவரசன் இலுமியின் சொற்களைக் கேட்ட மந்திரி குத்துப் பிடியின் கண்களில் உஷ்னம் ஏறியது. அவர் கைகளில் இருந்த மன்னனின் மதுக் கிண்ணம் நடுக்கம் கண்டது. இதனை அவதானித்துவிட்ட மன்னன் குத்தலகேசி….இலுமினாட்டி, முதலில் பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்..என்று சீறினார்.

- யார் பெரியவர்? அரிய சிந்தனைகள் எனும் பெயரில் குப்பைகளை அப்பாவிகள் தலையில் கட்டும் இவர் பெரியவரா? ஆலோசனைகள் எனும் பெயரில் மொக்கைகளையும், வெற்றுக் கிண்ணங்களில் மதுவையும் நிரப்பும் இவர் பெரியவரா… ஹாஹாஹா தந்தையே நீங்கள் பேரானந்த விகடனிற்கு ஜோக் எழுத முற்படவேண்டும். அல்லது…… இளவரசன் இலுமி இழுத்தான்.

- அல்லது… மன்னன் குத்தலகேசியின் குரலில் கோபம் எல்லை மீற முற்பட்டது.

- அல்லது.. மதுக்கிண்ணம் காலியாகவே இருக்கக்கூடாது என துடிதுடிக்கும் நீர் பெரியவரா.

இலுமினாட்டியிடம் இருந்து வந்த இந்த சொற்களைக் கேட்டதும் தன் ஆசனத்தில் இருந்து துள்ளி எழுந்தான் மன்னன் குத்தலகேசி. மந்திரவாதி கருந்தேள் நிலைமை சூடாவதை உணர்ந்தான்.

- ஹாஆஆஆ…… அரண்மனையில் இருக்கும் பணிப்பெண்களிடம் நவராவா குறுவோலை வீசி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களிடம் மன்மத ஒளடதங்கள் பெற்று, எம் நாட்டுப் பெண்டிரை வெறுத்து விதேசிகளான கொரியப் பெண்டிரை தேடி ஓடி, மன்மத சுகத்தில் திளைத்து, உடல் இளைத்து, களைத்து திரியும் நீ எனக்கு மகனாக வாய்த்தது நான் பெற்ற சாபமடா, நன் பெற்ற சாபம்… எனப் பாய்ந்த குத்தலகேசியின் குரல் தழுதழுத்தது.

- நான் உங்கள் சாபம், நீங்கள் என் சாபம்… இரக்கமில்லாமல் வெட்டினான் இளவரசன் இலுமினாட்டி. நிலைமை மோசமாகிக் கொண்டே செல்வதைத் தடுக்க விரும்பிய மந்திரவாதி கருந்தேள்… இளவரசே இலுமினாட்டி, தந்தை சொல்வதைக் கேள், உன் உதவி இப்போது எமக்கு அவசியம் என்றான்.

மந்திரவாதியின் தலையீட்டால் சற்று சாந்தம் கொண்ட இளவல் இலுமி…. யாரை இங்கு இட்டு வர வேண்டும் என்றான் வெறுப்பாக.

- இளவரசே என்னருகே வா என்றழைத்தான் மந்திரவாதி கருந்தேள்.

இலுமினாட்டி மந்திரவாதியை நெருங்கி வரவும் மேசையிலிருந்த வெள்ளைத் துணியை இலுமிக்கு சுட்டினான் மந்திரவாதி. அந்த துணியில் ஒரு காட்சி ஓடிக் கொண்டிருந்தது… இதோ, இவனையும், இவனையும் என துணியில் தெரிந்த இரு உருவங்களை இளவரசனிற்கு காட்டினான் ராஜ மந்திரவாதி.

- இவர்கள் இப்போது எங்கு உள்ளார்கள் மந்திரவாதி அவர்களே?

- குத்து நகரில் இன்ப விடுதிகள் நிறைந்த குத்துக் கார்னரில், ஒரு இன்ப விடுதியில்…. மந்திரவாதி உச்சரித்த இன்ப விடுதி எனும் சொல் இளவரசன் இலுமிக்கு தேனாக காதில் வழிந்தது.

- ஒஹோ..பலே..பலே. இந்த இன்ப விடுதி யாருடையது என்பது உங்களிற்கு தெரியுமா மந்திரவாதி அவர்களே?

- சீன அழகி ஸிங்ஸிங்கின் இன்ப விடுதி அது இளவரசே… மந்திரவாதியின் பதிலில் புன்னகை கலந்திருந்தது.

- ம்.. உடனே புறப்படு என்று இலுமினாட்டியைப் பார்த்து உத்தரவிட்ட மன்னன் குத்தலகேசி…. நாசக்குத்து நாவலனையும் உன்னுடன் அழைத்துச் செல் உன் வீரதீரம் நாம் அறியாததல்ல என்று முழங்கினார்.

சற்று அமைதியாக நின்ற இளவரசன் இலுமி, தந்தையே நன்றாகக் குடி, ஏனெனில் நாளை என் தலையில் உன் முடி.. என்று இரக்கமில்லாத வார்த்தைகளை உதித்துவிட்டு மந்திராலாசோனை மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

தன் மகனின் சொற்கள் கூரிய அம்புகளாக தன் இதயத்தில் வந்து பாய்வதை உணர்ந்த மன்னன் குத்தலகேசி தன் ஆசனத்தில் வீழ்ந்தார். வெறுமையாக இருந்த தன் மதுக்கிண்னத்தை பார்த்த அவர் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அக்கிண்ணத்தை நிரப்ப ஆரம்பித்தது.

[பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் ஜின்னு]

Saturday, June 12, 2010

லாங் ஜான் சில்வர்


ljs1 புதிய உலகைத் தேடிச் சென்ற ஐரோப்பியர்களின் கடற்பயணங்களும், அப்பயணங்கள் ஐரோப்பியப் புவிப்பரப்பிற்கு எடுத்து வந்த விந்தையான தகவல்களும், சாகசக் கதைகளும் மேற்குக் கடலின் காற்றுடன் கதைபேசிப் பறந்த காலப்பகுதி. கடற்கொள்ளையர்கள், புதையல் தீவுகள், புதையல் வேட்டை என சாகசப் பயணங்களிற்காக தம் வாழ்க்கையையே அர்பணிப்பதற்கு மனித உள்ளங்கள் ஏங்கிய காலம்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபு பைரொன் ஹேஸ்டிங்ஸ், ரகசியமான ஒரு வரைபடத்தை பெரும் விலை கொடுத்து வாங்குகிறான். அமேசானின் அடர்ந்த காடுகளிற்கிடையில் மறைந்திருக்கும் புதையல் நகரமான கயனாகேபாக்கை சென்று அடைவதற்கான பாதை அதில் பொதிந்திருக்கிறது.

இதனை அடுத்து கப்பல் ஒன்றில் தன் மாலுமிகளுடன் புதையல் நகரத்தை தேடிப் பயணமாகிறன் பைரொன் ஹேஸ்டிங்ஸ். இங்கிலாந்தில் இருக்கும் அவன் சொத்துக்களைப் பராமரிக்கும் பொறுப்பு பைரொன் ஹேஸ்டிங்ஸின் மனைவியான விவியானிடம் வந்து சேர்கிறது.

விவியான், ஆடம்பரமான வாழ்க்கைமுறை கொண்டவள். இதனால் ஹேஸ்டிங்ஸின் சொத்துக்கள் இளவேனிலின் சூரியக் கதிர்கள் பட்டு உருகும் பனிபோல் மெதுவாக கரைய ஆரம்பிக்கின்றன. புதையல் நகரைத் தேடிச் சென்ற பைரோனிடமிருந்து மூன்று வருடங்களிற்கு மேலாக எந்தவித தகவல்களும் வந்து சேராத நிலையில் பொருளாதார சிக்கல் விவியானை நெருக்க ஆரம்பிக்கிறது.

பைரோன், புதையல் நகரைத் தேடிச் சென்ற பின்பாக பல ஆண் நண்பர்களுடன் உறவுகளை தேடிக் கொள்ளுகிறாள் விவியான். அவள் தன் ஆடம்பர வாழ்வினை ஓரளவேனும் பேணுவதற்கு இந்த உறவுகள் உதவுகின்றன. விவியானின் இவ்வகையான உறவுகளால் அவளிற்கு கண்ணியம் குறைந்தவள் என்ற பெயர் சமூகத்தால் இலகுவாக சூட்டப்பட்டுவிடுகிறது. இந்நிலையில் அவள் கொண்ட உறவுகளின் விளைவாக தான் கர்ப்பமுற்றிருப்பதை அறிகிறாள் விவியான். நிலைமை மோசமாகும் முன்பாக அவள் சமீப காலமாக நெருங்கிப் பழகிவரும் பிரபுவான பிரிஸமை திருமணம் செய்து கொள்வது எனும் தீர்மானத்திற்கு வருகிறாள் விவியான்.

ljs2 தன் கணவனான பைரோன் ஹேஸ்டிங்ஸ் இறந்துவிட்டான் என்று உலகிற்கு அறிவித்துவிட்டு பிரபு பிரிஸமை திருமணம் செய்து கொள்ளலாம் என விவியான் எண்ணுகிறாள். பிரபு பைரோன் ஹேஸ்டிங்ஸின் சொத்துக்கள் கரைந்து போன உண்மை அறியாத பிரபு பிரிஸம், அச்சொத்துக்களை தான் அடையலாம் எனும் பேராசையில் விவியானை திருமணம் செய்வதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறான்.

இங்கிலாந்தில் இலையுதிர்காலம் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, குளிர், கதவுகளை தன் உறைந்த விரல்களால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கும் நாட்களில் தன் மறுமணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறாள் விவியான். அந்த பரபரப்பான தருணத்தில் பைரோன் ஹேஸ்டிங்ஸின் சகோதரனான எட்வர்ட், ஒரு செய்தியை விவியானிற்கு எடுத்து வருகிறான்.

மூன்று வருடங்களிற்கும் மேலாக எந்த தகவல்களுமின்றி உலகின் ஏதோ ஒரு மூலையில் தொலைந்து, இறந்து போனதாக கருதப்பட்ட பைரோன் ஹேஸ்டிங்ஸ் அனுப்பி வைத்திருக்கும் செய்தி அது. அவன் தேடிச் சென்ற புதையல் நகரத்தை பைரோன் கண்டுபிடித்து விட்டான் என்பதுதான் அந்தச் செய்தி. பைரோன் கண்டுபிடித்த புதையல் நகரத்தில் குவிந்திருக்கும் செல்வங்களை, யாரும் அறியாது மிக ரகசியமாக கடத்திக் கொண்டு வருவதற்கு பைரோனிற்கு இன்னுமொரு கப்பல் அவசியம் தேவைப்படுகிறது. அதற்காக எஞ்சியிருக்கும் தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஒரு கப்பலையும், மாலுமிகளையும் புதையல் நகரிற்கு இட்டுவரப் பணித்து, ஒரு பழங்குடி இந்தியனிடம் மடல் எழுதி அனுப்பி வைக்கிறான் பைரோன் ஹேஸ்டிங்ஸ்.

அது மட்டுமல்லாது தன் சொத்துக்களின் மீது பூரண அதிகாரம் கொண்டவனாக தன் சகோதரன் எட்வர்டை நியமிக்கிறான் பைரோன் ஹேஸ்டிங்ஸ். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தான் நாடு திரும்பி வரும் வரையில் தன் மனைவி விவியானை ஒரு கன்னியாஸ்த்ரீகள் மடமொன்றில் அடைத்து வைக்கும்படியும் பைரொன் கேஸ்டிங்ஸ் அம்மடலில் கேட்டுக் கொள்கிறான்.

பைரொன் ஹேஸ்டிங்ஸின் இந்தப் புதிய திட்டத்தால், விவியானின் ஆசைக் கனவுகள் யாவும் சிதறிப் போகின்றன. தன் கணவன் பைரோன் ஹேஸ்டிங்ஸிடம் அவள் ஊமையாக அனுபவித்த கொடுமைகளிற்கு பழிதீர்க்கத் துடிக்கிறாள் விவியான். பைரோனின் மடலினால் அடங்கிப் போவதற்கு விவியான் பத்தினிப் பெண்ணல்ல. பைரோனின் சொத்துக்களை விற்பதற்குரிய ஆவணங்களில் அவள் கையொப்பம் இடுவதற்குரிய விலையாக, புதையல்நகரம் நோக்கிப் பயணமாகும் கப்பலில் அவளும் பயணிக்கும் ஒப்பந்தம் ஒன்றை பைரொனின் சகோதரன் எட்வர்ட்டை மிரட்டி ஏற்படுத்திக் கொள்கிறாள் விவியான்.

ljs3 மேலும் தன் கொடுமைக்காரக் கணவன் கண்டுபிடித்த புதையலில் ஒரு பங்கை எவ்வாறாவது தனதாக்கிக் கொள்ளவும் திட்டம் வகுக்கும் விவியான், புதையல் நகரை நோக்கி பயணிக்கும் கப்பலில் தனக்கு சாதகமாக செயற்படக்கூடிய சில மாலுமிகளை கொண்டு செல்ல விரும்புகிறாள். இதற்காக விவியான், டாக்டர் Livesey ஐ சென்று சந்தித்து அவரின் உதவியை கேட்கிறாள்.

விவியானின் திட்டத்திலுள்ள அபாயங்களை அவளிற்கு நயமாக எடுத்துரைக்கிறார் டாக்டர் லிவெசி. ஆனால் விவியானோ தான் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காது இருக்கிறாள். வேறுவழி இல்லை என்ற நிலையில் டாக்டர் லிவெசி, ஒரு கடலோடியிடம் விவியானை அறிமுகம் செய்து வைக்கிறார். ஒரு காலத்தில் பல உள்ளங்களை பயத்தினால் ஒடுங்க வைத்த கடலோடி அவன். அவனை அறியாதவர்களிற்கு அவன் பெயர் ஜான் சில்வர். அவன் நெருங்கிய நண்பர்களிற்கு Long John Silver ….

உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான வாசகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த சிறுவர் இலக்கியம் Treasure Island ஆகும். Robert Louis Stevenson எழுதிய அந்த அமரகாவியம், வாசகர்கள் மனதில் விதைத்துச் சென்ற பெருங்கனவொன்றின் ஒரு சிறு துகளை கண்டடைவதற்கான ஒரு சிறு முயற்சியே இது என்று தாழ்மையாகக் கூறியே Long Jhon Silver எனும் இக்காமிக்ஸ் தொடரின் முதல் பாகமான Lady Vivian Hastings ஐ ஆரம்பிக்கிறார் கதாசிரியர் சேவியர் டாரிசன்.

லாங் ஜான் சில்வர் எனும் அழியாப் புகழ் பெற்ற கடற்கொள்ளையனின் வாழ்க்கை, புதையல் தீவு சாகசத்தின் பின்பாக எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர் கண்முன் எடுத்து வருகிறது கதை. டாக்டர் லிவெசியும் புதையல் தீவு கதையில் வரும் ஒரு பாத்திரமே.

புதையல் நகரம் நோக்கிப் பயணிக்கும் கப்பலில் சில நிர்பந்தங்களால் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட டாக்டர் லிவெசி, சம்பவங்கள் நிகழ்ந்து 50 வருடங்களின் பின், தன் இறுதிக்காலத்தில், அவை குறித்த நினைவுகளை அவன் மனதிற்கு நெருக்கமான ஒருத்தியுடன் கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதாகவே கதை ஆரம்பமாகிறது.

அமேசான் காட்டு ஏரிகளில், அயர்வுற்று, நோய் பீடித்து, மாலுமிகள் ஒவ்வொருவராக இறந்து வீழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் புதையல் நகரை தேடிச் செல்லும் பைரோன் ஹேஸ்டிங்ஸின் கப்பல், எதிர்பாராத நிலையில் புதையல் நகரை கண்டடைவதாக ஆரம்பிக்கும் ஆல்பத்தின் ஆரம்பக்காட்சிகள் அசத்திப் போடுகின்றன. குறிப்பாக இப்பக்கங்களில் சித்திரங்கள் ரசிகனை தம் மந்திரத்தால் கட்டிப்போடுகின்றன.

ljs4 தொடரும் கதையில் விவியான் வாழ்க்கை குறித்த தகவல்களும், அவள் எதற்கும் அஞ்சாத தந்திரம்மிக்க துணிச்சல்காரி என்பதும் கூறப்படுகிறது. லாங் ஜான் சில்வரின் அறிமுகம் அருமையாக இருக்கிறது. ஆஜானுபாகுவான ஒரு பாத்திரமாக கதை, மற்றும் சித்திரங்கள் வழி ஜான் சில்வர் உலா வருகிறான். விவியான், தன் ரத்தத் துளிமூலம் லாங் ஜான் சில்வருடன் செய்யும் ஒப்பந்தமும், அதன் பின் ஜான் சில்வர், எவ்வாறு தன் மாலுமிகளுடன் புதையல் நகரம் நோக்கிச் செல்லும் Neptune கப்பலில் இடம் பிடிக்கிறான் என்பதும் படு விறுவிறுப்பாக ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன.

காமிக்ஸ் தொடரின் கதாசிரியர் சேவியர் டாரிசன், தொய்வில்லாது கதையை நகர்த்துகிறார். இரண்டாவது ஆல்பமான Neptune ல் சஸ்பென்ஸும், லாங் ஜான் சில்வரும் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் கதையை நகர்த்துவதில் அசாத்திய வெற்றி காண்கிறார் கதாசிரியர். ஆல்பத்தின் சித்திரக்கலைஞரான Mathieu Lauffray, ஒளி மங்கிய இங்கிலாந்தின் இலையுதிர்காலம், குளிர்காலம், அமேசான் ஏரி, என்பவற்றின் சூழ்நிலைகளோடு வாசகனை ஒன்ற வைக்கிறார். கடற்கொள்ளையர்கள் நெப்ட்யூன் கப்பலை சாமர்த்தியமாக தமதாக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் சித்திரங்கள் சபாஷ் போட வைக்கின்றன.

நான்கு ஆல்பங்களில் நிறைவடையும் கதையாக திட்டமிடப்பட்ட கதையில், இதுவரை மூன்று ஆல்பங்கள் வெளியாகியுள்ள நிலையில், வாசகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற ஒரு காமிக்ஸ் தொடராக லாங் ஜான் சில்வர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. கடற்கொள்ளையர்கள், புதையல் என எம் மனங்களின் ஒரு ஓரத்தில் வாழ்ந்திருக்கும் கனவுகளை மறுபடியும் உயிர்க்க வைக்கிறது இக்காமிக்ஸ் தொடர். அசத்தலான அட்டைப்படங்களைப் பாருங்கள் வாய்ப்புக் கிடைத்தால் எந்தக் காமிக்ஸ் ரசிகனாவது இந்த ஆல்பத்தை புரட்டிப் பார்க்காமல் இருப்பானா என்ன!!

9782205060249 9782205063486

வெகுவிரைவில் சினிபுக் இக்காமிக்ஸ் தொடரை ஆங்கிலத்தில் வெளியிடவிருக்கிறது. புதையல் தீவு கதையின் முடிவில் மறு உலகில் லாங் ஜான் சில்வரிற்கு நல்வாழ்வு கிடைப்பது என்பது சந்தேகமே என்கிறான் ஜிம் ஹாக்கின்ஸ். லாங் ஜான் சில்வர், மறு உலகு செல்வதற்கு முன்பாக அவனிற்கு கொஞ்சம் நல்வாழ்வு கிடைக்குமா என்பதை நீங்கள் அறியவிரும்பினால் உடனடியாக லாங் ஜான் சில்வரின் நெப்ட்யூன் கப்பலில் ஏறுங்கள் நண்பர்களே. [****]

Thursday, June 10, 2010

எலி


Jose Maria வும், Rosa வும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு பொருளாதார நிர்ப்பந்தங்களினால் தொழில் தேடி வந்து குடியேறியவர்கள். சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த டொரெஸ் தம்பதியினரின் பிரம்மாண்டமான வீட்டில் ரோஸா ஒரு பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறாள்.

ஹோசே மரியா ஸ்பெயினில் தங்கி வேலை பார்பதற்கான தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாத ஒரு சட்டவிரோதக் குடியேறி. இருப்பினும் அவன் கட்டிட நிர்மாண ஸ்தலங்களில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறான்.

டொரெஸ் தம்பதியினர் பயணங்களின்போது தம் வீட்டை ரோஸாவின் கண்காணிப்பில் விட்டுச் செல்லும் வேளைகளில் ரோஸா தன் காதலன் ஹோசே மரியாவை அவ்வீட்டிற்குள் அழைத்து வந்து காதல் கொண்டு மகிழ்கிறாள்.

டொரெஸ் தம்பதியினரின் மூன்று மாடிகளைக் கொண்ட அவ்வீட்டின் பலபகுதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளாக இருப்பதை ஹோசே வியப்புடன் அவதானிக்கிறான். தான் தங்கியிருக்கும் சிறு அறையில் ஆறுபேர்கள் நெருக்கடித்துக் கொண்டு வாழவேண்டிய உண்மையை அவன் டொரெஸ் வீட்டின் வெறுமையான விஸ்தாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.

ஹோசே இயல்பிலேயே கோபக்காரன். தன் கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாதவன். ஸ்பெயின் நாட்டு சமூகத்தால் கண்ணியமற்ற வகையில் அவன் நடாத்தப்படுவது அவனிற்கு பெரும் ஆத்திரத்தை தருகிறது. இந்நிலையில் தன் அன்புக் காதலியான ரோஸாவை இரு நபர்கள் கிண்டல் செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஹோசே அவர்கள் இருவரையும் தேடிச் சென்று அடித்து விடுகிறான். இது பற்றிய புகார் ஹோசே பணிபுரியும் இடத்தை எட்ட, ஹோசேயின் மேற்பார்வையாளர் அவனை வேலை நீக்கம் செய்து விடுகிறார்.

rabia-2010-19931-1480358313 மேற்பார்வையாளர் தன் காதலி ரோஸா குறித்து தவறாகப் பேசியதை மனதில் வைத்திருந்த ஹோசே மறுநாள் மேற்பார்வையாளனை தேடிச் சென்று அடிக்கிறான். துரதிர்ஷ்டவசமாக ஹோசேயின் அடியினால் மேற்பர்வையாளன் கட்டிடத்தின் உயரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்து போகிறான். பொலிசார் இக்கொலைக்கு காரணமான ஹோசேயை வலைவிரித்து தேட ஆரம்பிக்கிறார்கள். செல்வதற்கு எந்த இடமும் அற்ற ஹோசே யாரிற்கும் [ரோஸாவிற்குகூட] தெரியாது டொரெஸ் தம்பதிகளின் வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான்….

தம் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் பிழைக்க வரும் கடைநிலைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எண்ணிலடங்காதது. அதிலும் பிழைக்க வரும் நாட்டில் சட்டபூர்வமாக தங்குவதற்குரிய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் வாழ்க்கை நரகத்தைவிட மோசமானதாகவே இருக்க முடியும். பூக்கள் மலர்வதுபோல் அவர்களின் வாழ்க்கையில் வேதனைகள் மலர்ந்தபடியே இருக்கின்றன. அவ்வகையான இருவரின் வேதனையான கதையையே ஸ்பானியத் திரைப்படமான Rabia [வெறி] தன்னுள் கொண்டிருக்கிறது.

காதல், திகில், பொருளாதார அகதிகள் குறித்த சமூகத்தின் பார்வை என திரைக்கதை விரிகிறது. திரைப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் டொரெஸ் தம்பதிகளின் வீட்டினுளேயே படமாக்கப்பட்டிருக்கிறது. வீடு என்பது சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள், வெளிவேடங்கள், சுரண்டல்கள் என்பவற்றோடு இரு குடியேறிகளையும் ஏறக்குறைய ஒரு தடுப்புச் சுவர்போல் சூழ்ந்து நிற்கிறது.

ஹோசே பணிபுரியும் இடத்திலேயே அவன் பிறநாட்டவன் என்பது வன்மமாக அவனது மேற்பார்வையாளனால் ஹோசேக்கு வலியுறுத்தப்படுகிறது. சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் வேலை பார்ப்பதற்குரிய ஆவணங்கள் அவனிடம் இல்லாத நிலையிலும் கூட அவனை வேலைக்கமர்த்தி சுரண்டும் மேற்பார்வையாளன் ஹோசேயை சக மனிதனாக பார்க்கத் தவறுகிறான்.

rabia-2010-19931-343436430 ஹோசே ஸ்பெயின் நாட்டில் இருப்பது உழைப்பதற்காகவே எனவே அவன் யந்திரம்போல் இயங்க வேண்டுமென மேற்பார்வையாளன் எதிர்பார்க்கிறான். ஹோசேயின் காதலி குறித்து கண்டபடி பேசுவதற்கும் அவன் தயங்குவதில்லை. இந்தப் பாத்திரம் வழி ஸ்பெயின் நாட்டில் பொருளாதார அகதிகள் எதிர்கொள்ளும் அவலநிலையை திரைக்கதை முன்வைக்கிறது ஆனால் இவற்றை அவற்றின் முழு வீச்சற்ற நிலையிலேயே திரைப்படத்தில் உணரக்கூடியதாக இருக்கிறது.

ஹோசேக்கு நேர் எதிரானவளாக, அடங்கிப் போபவளாக, அதிகம் எதிர்த்துப் பேசாதவளாக ரோஸா இருக்கிறாள். டொரெஸ் தம்பதிகள் நல்ல மனிதர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஹோசேயைப் போலன்றி தன் வேலைக்காக சில சமரசங்களை செய்து கொள்வதற்கு ரோசா தயங்குவதில்லை. டொரெஸ் தம்பதியினரின் மகன் அவளை பலாத்காரம் செய்தபோதிலும் தன் வேதனைகளை தனக்குள் முடக்கி வாழப் பழகுகிறாள் ரோஸா.

ஹோசே, யாரிற்கும் தெரியாது டொரெஸ் தம்பதியினரின் வீட்டினுள் நுழைந்தபின் அவன் பார்வை வழியாக மேல்தட்டு குடும்பம் ஒன்றின் கதை பார்வையாளன் முன் உருப்பெறுகிறது. திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்படும் தருணம் இதுவே. மேல்தட்டுக் குடும்பத்தின் வாழ்க்கையோடு, தன் காதலி ரோஸாவின் சோகத்தையும், அவள் கண்ணீரையும், வீட்டின் சுவர்களைக் கடந்து வரும் வலி நிறைந்த அவள் வேதனைகளையும் மெளனமான வலியுடன் தாங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறான் ஹோசே.

நாட்கள் செல்ல செல்ல, டொரெஸ் தம்பதிகளின் வீட்டினுள் வசிக்கும் எலிகள் போலவே ஹோசேயும் வாழப் பழகிக் கொள்கிறான். எலிகள் அவனிற்கு நெருக்கமானவையாக தோன்றுகின்றன. படிப்படியாக அவனும் அவ்வீட்டின் ஒரு எலியாகி விடுகிறான். மனிதர்களிடமிருந்து ஒளிந்திருக்கிறான், உணவுகளை திருடி உண்கிறான். நிழலான மூலைகளில் கழிவகற்றுகிறான். வீட்டின் இண்டு இடுக்குகளில் புகுந்து வாழ்கிறான். ஆனால் அவன் கைக்கெட்டிய தூரத்தில் அவன் காதல், அவன் அன்பை தன் வயிற்றில் சுமந்தவண்ணம் அவனை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு அருகாமையிலும் அவன் உணரவேண்டிய அன்பின் தூரம் மிகவும் நீண்டதாகவிருக்கிறது. அது அவனை அன்பின் வலியில் ஒடுங்கச் செய்கிறது.

இவ்வகையான உணர்சிகரமான திரைக்கதை, ஹோஸே மறைந்து வாழ்வதற்காக டொரெஸ் தம்பதியினர் வீட்டினுள் நுழைந்ததும் ஒரு த்ரில்லராக மாற்றம் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. ஹோசே எப்போது மாட்டிக் கொள்வானோ? இதனால் என்ன நடக்குமோ? தன் கோபத்தை அடக்கத் தெரியாத ஹோசே அவன் கண்முன் காதலி ரோஸா படும் வேதனைகளைப் பார்த்து என்ன பதிலடி தருவானோ என பதட்ட உணர்வொன்று நெகிழ்வான உணர்வுகளையும் மீறி மனதை ஆக்கிரமிக்கிறது.

rabia-2010-19931-1240351014 வலிமையான இந்த த்ரில்லர் தன்மையே திரைப்படத்தில் மனதை நெகிழவைக்கும் தருணங்கள் அளிக்கும் உணர்வுகளை சக்தியற்றதாக்கி விடுகிறது. ஒரே வீட்டினுள் இரு பொருளாதாரா அகதிகளின் வேறுபட்ட வாழ்க்கையை உணர்ச்சிகரமாக சித்தரிக்க விழையும் திரைப்படம் ஒரு த்ரில்லராகவே இங்கு வெற்றி பெறுகிறது.

ஹோசே[Gustavo Sanchez Parra], ரோஸா[Martina Garcia], எனும் பிரதான பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தன்னுடன் வீட்டினுள் வசித்திருந்த எலி மரணமடைந்தபின் அதனை ஹோசே தன் பல் ஒன்றுடன் பெட்டியில் வைத்து புதைப்பது, ஒரே வீட்டில் இருந்தபடியே ரோஸாவுடன் தொலைபேசியில் உரையாடுவது, தன் குழந்தையை தன் கைகளில் பெற்று ஹோசே கூறும் வார்த்தைகள் போன்றன மனதை கலங்க வைக்கும் தன்மை கொண்டவை. இனிமையான பின்னனி இசையும் உணர்வுகளிற்கு துணை சேர்க்கிறது. படத்தை நல்லவகையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் Sebastien Cordero.

வீட்டில் வாழும் எலிகளைக் கொன்றொழிப்பது போலவே ஹோசே போன்ற மனிதர்களின் வாழ்க்கையை சமூகம் தினமும் அழித்துக் கொண்டிருக்கிறது. அம்மனிதர்களின் வாழ்க்கையை சற்று எண்ணிப் பார்க்கும்போது சபிக்கப்பட்ட அந்த மனிதர்களைவிட எலிகள் சுதந்திரமாக வாழ்ந்து மடிகின்றன என்ற உணர்வு மேலோங்குகிறது. சமூகம் உருவாக்கிய எலிகள், ஒடுங்கிய எல்லைகளினுள் உயிர் வாழ ஓய்வின்றி ஓடிக் கொண்டேயிருக்கின்றன. [**]

ட்ரெயிலர்

Monday, June 7, 2010

தூக்கிற்கு ஒரு தூது


gp2 அமெரிக்காவின் டென்னெசி மாநிலத்தின் சிறு கிராமமான சர்ச் ஹில், வடக்கு, தெற்கு உள் நாட்டு யுத்தத்தின் காயங்களை மெளனமாக தாங்கி கொண்டு நிற்கிறது. அதன் சிறிய புகையிரத நிலையத்தில் அமர்ந்திருக்கும் முதிய ஷெரீஃப் டாம், ஜெனரல் லீயைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

புகையிரத நிலையத்தின் அருகில் நிற்கும் மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. வரப்போகும் ரயிலுக்காக இரு பெண்மணிகள் தங்களிற்கருகில் ஒர் சவப்பெட்டியுடன் காத்திருப்பதை காணும் ஷெரீஃப், பெண்மணிகளிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

சவப்பெட்டியில் இருப்பது பத்து நாட்களின் முன் பீட்டர்ஸ்பெர்க்கில் இடம்பெற்ற மோதலில் உயிர் நீத்த தன் சகோதரன் வில்லியமின் உடல் எனக் கூறுகிறாள் இள நங்கை ஷானோன். அவன் உடலை அடக்கம் செய்வதற்காக மெம்பிஸ் நகரிலுள்ள தங்கள் குடும்பக் கல்லறைக்கு கொண்டு செல்லப்போவதாகவும் ஷானோன் தெரிவிக்கிறாள். இப் போர் என் மகனை பலியெடுத்துக் கொண்டாலும், என் கணவனை விரைவில் என்னிடம் மீளத் தந்துவிடும் என்கிறாள் ஷனோனின் தாயான லூயிஸ் கிராஞ்சர்.

இத்தருணத்தில் புகையை மேகங்களாக கக்கியவாறே ரயில் நிலையத்தில் நுழைகிறது ரயில். ரயிலின் தபால் சேவை பெட்டியை தன் துப்பாக்கியுடன் நெருங்குகிறான் ஷெரீஃப் டாம். அப் பெட்டியின் கதவுகள் திறக்க, அதனுள் ஒர் மரப் பெட்டியை காவல் காத்தபடி நிற்கிறார்கள் சில இளைஞர்கள்.

அந்த மரப் பெட்டியினுள், போரில் சேதமடைந்துள்ள சர்ச் ஹில்லின் தேவாலயத்தை புணரமைப்பதற்காக யாங்கிகளிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் இருக்கிறது. பெட்டியைக் காவல் காத்து நிற்கும் இளைஞர்களை தன் சகோதரனின் சவப்பெட்டியை தூக்கி ரயிலில் ஏற்றுவதற்கு உதவி செய்யும்படி கேட்கிறாள் இளம் பெண் ஷானோன்.

gp3 முதலில் பணப் பெட்டியினை பாதுகாப்பாக கொண்டு சேர்த்த பின் அவளிற்கு உதவுவதாக தெரிவிக்கும் இளைஞர்களை கடிந்து கொள்கிறான் ஷெரீஃப் டாம், யுவதிகளிற்கு உடனடியாக உதவும்படி அவர்களிற்கு உத்தரவும் இடுகிறான். இதனால் அரை மனதாக இளைஞர்கள் சவப்பெட்டியை தூக்க செல்கிறார்கள். சவப்பெட்டியை இளைஞர்கள் தூக்கியதும், தன் மேல் கோட்டுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டுகிறாள் ஷானோனின் தாயாகிய லூயிஸ் கிராஞ்சர்.

இளைஞர்கள், லூயிஸின் கையிலுள்ள துப்பாக்கியைக் கண்டு திகைப்படைந்த அதே வேளை, ஷெரீஃபிற்கு பின்னால் நின்ற ஷானோன், தன் கைத்துப்பாக்கியால் ஷெரீஃபின் தலையில் அடித்து அவனை மயக்கமுறச் செய்கிறாள். ஷெரீஃப் கீழே வீழ்ந்ததும் விரைவாக ரயில் பெட்டியினுள் பாய்ந்து ஏறும் ஷானோன் பணப்பெட்டியை துப்பாக்கியால சுட்டு திறக்கிறாள், இச்சமயத்தில் ரயில் நிலையத்தை குதிரைகளுடன் வந்தடைகிறான் ஷானோனின் தம்பி வில்லியம்.

பணப்பெட்டியிலிருந்து எடுத்த பணப் பையை வில்லியத்திடம் எறிந்து விட்டு, ஒர் குதிரையில் தாவி ஏறுகிறாள் ஷானோன். தன் துப்பாக்கியை சவப்பெட்டியை தூக்கியபடி நிற்கும் இளைஞர்களை நோக்கி குறி வைத்தவாறு நிற்கும் லூயிஸ், தன் வாயில் புகையும் சிகரெட்டில் ஒர் டைனமைட் குச்சியை பற்ற வைத்து, ரயில் நிலையத்தில் வீசி விட்டு, வில்லியம் தந்த குதிரையில் ஏறிக் கொள்கிறாள். தங்கள் கைகளிலிருக்கும் சவப்பெட்டியை எறிந்து விட்டு தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் டைனமைட்டிலிருந்து விலகிப்பாய்கிறார்கள். ரயில் நிலையம் வெடித்து சிதற, குதிரைகளில் தப்பிச் செல்கிறது ஜெனரல் கிராஞ்சரின் குடும்பம்.

நீண்டு கிடக்கும் புல்வெளியினூடாக, ஆறு கைதிகளை தாங்கியவாறு குதிரை வீரர்களின் காவலுடன், யாங்கிகளின் மக்லாகிலென் கோட்டையை நோக்கி செல்கிறது அவ்வண்டி. ஆறு கைதிகளில் ஒருவனான கலப்பின செவ்விந்தியன் ஒருவன் சக கைதி ஒருவனால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறான். அவன் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை கண்டு கொள்ளும் கைதிகள் , செவ்விந்தியனை தாக்கிய முரட்டுக் கைதியின் வீரம் குறித்து கிண்டல் செய்கிறார்கள்.

gp4 செவ்விந்தியன், யாங்கிகளின் துருப்பில் வழிகாட்டியாக பணியாற்றியவன், தன் கலகக் குணத்தினால் மக்லாகிலென் கோட்டையின் உருக்கு ஆலைகளில் கடூழியம் செய்வதற்கான தண்டனை பெற்றவன். வழமையாக கலகம் செய்பவர்களிற்கு தண்டனையாக கிடைப்பது தூக்குத்தான். இவன் அதிர்ஷ்டம் இவனிற்கு தெரிந்த அதிகாரி ஒருவனின் தலையீட்டால் தூக்கு தண்டனை கடூழியத் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கைதிகளின் கூச்சல்களோடு மக்லாகிலென் கோட்டையை வந்தடைகிறது வண்டி. காயமுற்ற செவ்விந்தியன் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்படுகிறான். செவ்விந்தியன் குணமடைந்தாலும் கூட கோட்டையில் இருக்கும் முரட்டுக்கைதிகள் அவனைக் காலி செய்து விடுவார்கள் எனக் கூறுகிறான் கைதிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளும் கோட்டையின் சார்ஜெண்ட். இதனை விட அவனை தூக்கிலிட்டிருக்கலாம் எனவும் தன் அபிப்பிராயத்தை தெரிவிக்கிறான்.

தலையில் அடிபட்டதால் ஏற்பட்ட மயக்கத்திலிருந்து மீளும் ஷெரீஃப் டாமை, நகரின் மூதாட்டிகள் கடிந்து கொள்கிறார்கள். பணத்தை கவர்ந்து சென்றது கிராஞ்சரின் குடும்பம் என்பதை அறிந்து கொள்ளும் அவர்கள், ஷெரீஃபையும், ரயிலில் பணத்தை எடுத்து வந்த இளைஞர்களையும் கிராஞ்சரின் இல்லத்தில் சென்று கிராஞ்சர்களிற்காக காத்திருக்கும் படி சொல்கிறார்கள். அவர்களும் வேறு வழியின்றி துப்பாக்கிகளுடன் கிராஞ்சரின் இல்லத்தில் அவர்களை எதிர் நோக்கி காவல் இருக்கிறார்கள்.

மாக்லாகிலென் கோட்டையின் மருத்துவர் காயமுற்ற செவ்விந்தியனை தன் கவனிப்பில் எடுத்துக் கொள்கிறார். செவ்விந்தியனை மருத்துவரிடம் தூக்கி வந்த ஜாக் எனும் வீரன், மோர்பின் எனும் வலி நீக்கும் மருந்தின் போதைக்கு அடிமையானவன், அவன் மருத்துவரிடம் மோர்பின் கிடைக்குமா என வினவுகிறான். மறு நாள் கோட்டைக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியில்தான் மோர்பின் மருந்து வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என அவனிற்கு பதிலளிக்கும் மருத்துவர், ஜாக் ,மோர்பின் இல்லாது வாழப் பழகிக் கொள்ளல் வேண்டும் என அறிவுரை தருகிறார்.

இதேவேளை கோட்டையின் இன்னொரு அறையில் ஒர் கைதியை மோசமாக தாக்கி விசாரனை செய்து கொண்டிருக்கிறான் காப்டன் லோப்மேன் எனும் கொடூரன். அந்தக் கைதி வேறு யாருமல்ல, அவன் பெயர் கிராஞ்சர். ஜெனரல் கிராஞ்சர்.

gp5 கிராஞ்சர் 1863ம் ஆண்டின் பிப்ரவரி, எப்ரல் மாதங்களிற்கிடையில் ரகசியமாக ஆற்றிய நடவடிக்கை ஒன்றைக் குறித்து அவனைத் துளைத்தெடுக்கிறான் காப்டன் லோப்மேன். அவன் கேள்விகளிற்கு சரியான பதில் தராது மழுப்புகிறான் கிராஞ்சர். தன்னிடம் சிகிச்சைக்காக வரவேண்டிய கிராஞ்சரை இன்னமும் காணவில்லையே என தேடும் கோட்டை மருத்துவர், அவனை லோப்மானின் விசாரணை அறையில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கண்டு கோபம் கொள்கிறார்.

மருத்துவரின் கோபத்தை சிறிதும் சட்டை செய்யாத லோப்மேன், நாளைக்காலை கிராஞ்சர் மீண்டும் தன் விசாரணைக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவரிடம் கூறிவிட்டு செல்கிறான்.

கிராஞ்சரின் காயங்களிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், அவன் முன்பு தங்கியிருந்த சிறை அறையிலிருந்து எடுத்து வந்த அவனிற்கு சொந்தமான சில பொருட்களை அவனிடம் கையளிக்கிறார். அந்தப் பொருட்களின் மத்தியில் இருந்த பைபிள் ஒன்றினை தன் கையில எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்கிறான் கிராஞ்சர்.

கிராஞ்சரின் அறையை விட்டு வெளியேறும் மருத்துவர், சிறைச்சாலையின் சிகிச்சைப் பிரிவின் இன்னொரு அறையில் சற்றுத் தேறிய நிலையில் காணப்படும் செவ்விந்தியனை அணுகி அவன் பெயர் என்ன என்று கேட்கிறார், தன் பெயர் நத்தானியல் கூப்பர் என அவன் கூறுகிறான், மறு நாள் அவன் உடல் தேறியதும் அவன் தண்டனைக் கைதிகள் உள்ள பகுதிக்கு மாற்றப்படுவான் என்பதை அவனிற்கு தெரிவிக்கிறார் மருத்துவர்.

சர்ச் ஹில்லில் ரயில் நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன், தன் கணவன் காலனல் கிராஞ்சரின் கீழ் பணிபுரிந்த லெப்டினண்ட் ஜோசேயை அவன் மறைவிடத்தில் வந்து சந்திக்கிறாள் லூயிஸ் கிராஞ்சர். தன் கணவனை காப்பாற்ற உடனே நடவடிக்கைகளை எடுக்கும் படி ஜோசேயிடம் பணத்தினை தந்து அவள் கேட்டுக் கொள்கிறாள்.

ஜோசேயின் திட்டப்படி, மறு நாள் காட்டில் மறைந்திருந்து, மாக்லாகிலென் கோட்டைக்கு மருந்துப் பொருட்களை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் வண்டியை தாக்குகிறார்கள் ஜோசே குழுவினர். காவலிற்கு வந்த வீரர்களின் உயிர்களைப் பறித்து விட்டு அவ்விடங்களை ஜோசேயும், அவன் வீரர்களும் எடுத்துக் கொள்ள, ஆம்புலன்ஸ் வண்டியில் வந்த கன்னியாஸ்திரிகளின் உடைகளை களைந்து அவற்றை தாங்கள் அணிந்து கொண்டு வீரர்களுடன் கூடவே செல்கிறார்கள் ஷானோனும், லூயிஸும்.

gp6 மாக்லாகிலென் கோட்டையில் காலை வழமை போல் வழுக்கி கொண்டிருக்கிறது. மருத்துவரை தேடி வரும் சார்ஜண்ட், காலனல் கிராஞ்சரை குறித்த நேரத்தில் காப்டன் லோப்மேன் தேடி வருவான் என்பதைக் கூறிவிட்டு, உடல் தேறிய நிலையிலுள்ள செவ்விந்தியன் நாத்தானியலை சிகிச்சைப் பிரிவிலிருந்து அழைத்துச் செல்கிறான். கைதிகள் பிரிவிற்குள் செல்லுமுன்பாக தன்னை கோட்டைக்கு எடுத்து வந்த அதிகாரியுடன் தான் சற்று உரையாட விரும்புவதாகத் தெரிவிக்கிறான் நத்தானியல். கோட்டையை விட்டு புறப்படத் தயாரான நிலையிலிருக்கும் அந்த அதிகாரியை நத்தானியல் காண்பதற்காக அழைத்துச் செல்கிறான் சார்ஜண்ட்.

கிராஞ்சரை விசாரிப்பதற்காக தயாராகிறான் காப்டன் லோப்மேன. இத்தருணத்தில் கோட்டையின் கதவுகள் திறக்க புழுதியைக் கிளப்பியவாறே உள்ளே நுழைகிறது ஆம்புலன்ஸ் வண்டி. சிகிச்சைப் பிரிவை நெருங்கும் ஆம்புலன்ஸ் வண்டியில் இருந்து மருந்துப் பெட்டிகள் இறக்கப்பட்டு உள்ளே கொண்டு செல்லப்படுகின்றன. கன்னியாஸ்திரிகள் வேடத்திலிருக்கும் கிராஞ்சர் பெண்மணிகளும், லெப்டினண்ட் ஜோசேயும், கோட்டை மருத்துவரின் உதவியுடன் சிகிச்சைப் பிரிவின் உள்ளே நுழைகிறார்கள்.

சிகிச்சைப் பிரிவின்உள்ளே அவர்கள் நுழைந்ததும், கன்னியாஸ்திரி உடையில் இருக்கும் லூயிஸ், கோட்டை மருத்துவரின் உதவிக்கு நன்றி செலுத்துகிறாள், மருத்துவரோ கிராஞ்சரை உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறார். சிகிச்சைப்பிரிவு சீருடை ஒன்றையும் கிராஞ்சரிடம் தந்து அணிந்து கொள்ளச் சொல்கிறார். கிராஞ்சர், ஷானோனிடம் தன் பைபிளை பத்திரமாக எடுத்து வரும்படி கேட்டுக் கொள்கிறான். இந்தக் குழு விரைவாக சிகிச்சைப் பிரிவின் கதவுகளை நோக்கி நகர்கிறது.

தன் அலங்காரங்களை முடித்துக் கொண்டு கிராஞ்சரை விசாரணை செய்வதற்காக அழைத்து வருவதற்காக வெளியே வருகிறான் காப்டன் லோப்மேன். நத்தானியல், தன்னை கோட்டைக்கு இட்டு வந்த அதிகாரியிடம் தன் மரண தண்டனையை கடூழிய தண்டனையாகக் குறைக்க ஏற்பாடு செய்த காப்டன் லாயிட்டிடம் தன் நன்றிகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறான். சிகிச்சைப்பிரிவின் வாயிலில் நிற்கும் ஆம்புலன்ஸ் வண்டியைக் கண்டு கொள்ளும் மோர்பின் போதைக்கு அடிமையான வீரன் ஜாக், போதையின் தாகத்துடன் ஆம்புலன்ஸ் வண்டியை நெருங்க ஆரம்பிக்கிறான்.

சிகிச்சைப் பிரிவின் கதவுகளின் முன் காவலில் நிற்கும் லெப்டினண்ட் ஜோசெயின் வீரனை நெருங்கி வரும் போதைப் பிரியன் ஜாக்கை, அவ் வீரன் தடுத்து நிறுத்துகிறான். தான் உடனடியாக மருத்துவரைக் காணவேண்டுமென அவ்வீரனிடம் கூறுகிறான் கிறுக்கு பிடித்த நிலையிலிருக்கும் ஜாக், அவனை சற்று நேரம் கழித்து வரும்படி அவ்வீரன் கேட்க ஜாக்கோ உரக்க கத்தியவாறே தன் கத்தியை ஓங்கியபடி வீரனை நோக்கி பாய்கிறான். ஜாக்கின் இந்த வெறிக் கூச்சல் லோப்மேன், நத்தானியல், சார்ஜண்ட் என அனைவரின் பார்வையையும் சிகிச்சைப் பிரிவு வாயிலை நோக்கி திசை திருப்பி விட்டு விடுகிறது.

gp7 தன் மேல் கத்தியுடன் பாயும் ஜாக்கை துப்பாக்கியால் சுடுகிறான் ஜோசேயின் வீரன், இதே வேளை சிகிச்சைப் பிரிவின் கதவுகளை உதைத்துக் கொண்டு வெளியே வருகிறார்கள், கிராஞ்சரின் மீட்புக் குழுவினர்…..

கிராஞ்சர் மீட்கப்பட்டானா? செவ்விந்தியன் நத்தானியலின் கதி என்ன? கிராஞ்சர்களிற்காக அவர்களின் இல்லத்தில் காத்திருக்கும் ஷெரீஃப் குழுவின் நிலை என்ன? கிராஞ்சர் மறைத்து வைத்திருக்கும் மர்மம் என்ன? காப்டன் லோப்மேன் என்ன செய்யப் போகிறான் எனும் கேள்விகளிற்கு பரபரப்பாக விடையளிக்கிறது Gibier De Potence எனும் காமிக்ஸ் தொடரின் முதல் பாகமான Le Jardin De Lys .

பிரென்ஞ்ச் காமிக்ஸ் கதைகளில் வெஸ்டர்ன் கதைகள் அரிதாகவே வெளிவரும் காலப்பகுதியிது. அப்படியே வந்தாலும் அவை பெரும்பாலும் வாசகர்களின் ஆதரவு கிடைக்காது சுருண்டு விடுவதும் உண்டு. ஆனால் இக்காமிக்ஸ் கதைத்தொடர் வெஸ்டர்ன் கதை ரசிகர்களின் தாகத்தை தாராளமாக தீர்த்து வைக்கிறது.

கிராஞ்சரை மீட்பது என்பதை மையமாக கொண்ட கதையில், கிராஞ்சர் மறைத்து வைத்துள்ள ரகசியம் என்ன என்பதும் அதனைக் கண்டுபிடிப்பதும் திருப்பங்களாக அமைந்து விடுகின்றன. கதையில் காணப்படும் திருப்பங்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்தி விடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கதையில் நடுவில் வரும் செவ்விந்தியன் நாத்தானியலின் பாத்திரம் எதிர்பார்பை தூண்டுகிறது. கொடூர வில்லனாக காப்டன் லோப்மேன் பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. தந்திரமும், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பவனாகவும் லோப்மேன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். லோப்மேன் பாத்திரம் இல்லாவிடில் கதை சற்றுக் காரம் குறைந்ததாகவே காணப்படும் என்பது என் தாழ்மையான கருத்து ஆகும்.

தொடரிற்கு கதையை எழுதியிருப்பவர்கள் François Capuron மற்றும் Fred Duval எனும் இருவர் கூட்டணி. கதைக்கு வித்தியாசமாக சித்திரங்களை வரைந்திருப்பவர் Fabrice Jarzaguet ஆவார். மூவரும் பிரெஞ்சுக் கலைஞர்கள். 2001 முதல் வெளியாகிய ஆரம்பித்த இத்தொடரில் இதுவரை நான்கு ஆல்பங்கள் பிரசுரமாயிருக்கின்றன. விறு விறுப்பான கதை சொல்லலும், எதிர்பாராத திருப்பங்களும் இத்தொடரை வாசகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது , நான்காவது ஆல்பத்துடன் தொடர் நிறைவு பெற்றது. விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட கதை, அபாரமான வண்ணத் தெரிவுகளுடன் கூடிய படு மோஸ்தரான சித்திரங்கள் என மனதைக் கவர்ந்த இக்கதைத் தொடர் திடீரென நிறுத்தப்பட்டது வேதனையானதே. வெஸ்டர்ன் கதைப் பிரியர்களை இக்காமிக்ஸ் தொடர் நிச்சயம் கவர்ந்திழுக்கும். [***]


ஆர்வலர்களிற்கு

GIBIER DE POTENCE