Monday, August 15, 2011

சீசரின் வீடு


மூளையின் சிதைவுற்ற திசுக்களை மீளுற்பத்தி செய்யும் ஆய்வுகளை வாலில்லா குரங்குகளில் மேற்கொண்டு வருகிறான் விஞ்ஞானியான வில். அவன் ஆய்வுகள் சாதகமான முடிவுகளை வழங்கும் நிலையை எட்டும்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வாலில்லாக் குரங்கு ஒன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறது. இதனால் அக்குரங்கு சுட்டுக் கொல்லப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட குரங்கு ஈன்ற குட்டியை ஆய்வுகூடத்திலிருந்து ரகசியமாக எடுத்து வந்து தன் வீட்டில் பராமரிக்க ஆரம்பிக்கிறான் வில். சீசர் எனப் பெயரிடப்பட்ட அந்த வாலில்லாக் குரங்கின் மூளைச் செயற்பாடுகள் வில்லை வியப்பிற்குள்ளாக்கும் எல்லைகளை தொட்டு நிற்கின்றன…..

பிரெஞ்சு அறிபுனைக் கதாசரியரான Pierre Boulle அவர்கள் 1963ல் படைத்த La Planete Des Singes எனும் நாவலைத் தழுவி அதன் சினிமா, தொலைக்காட்சி, காமிக்ஸ் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. பீய்ர் வூல் கற்பனை செய்த, மனிதர்களை அவர்களின் பரிணாம அதிகார மற்றும் அறிவடுக்குகளிலிருந்து கீழிறக்கி விட்டு குரங்குகள் ஆதிக்கம் செய்யும் உலகொன்று தோன்றுவதற்கு காரணமான ஆரம்பங்களை முன்வைப்பதாகவே இயக்குனர் Rupert Wyatt வழங்கியிருக்கும் Rise of the Planete of the Apes திரைப்படம் அமைகிறது.

புரட்சியையோ எழுச்சியையோ ஒரு விதைக்கு ஒப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வகையில் எதிர்காலமொன்றில் மனிதர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து பூமியில் விழும் விதையாக சீசர் எனும் சிம்பன்ஸி உருவாக்கப்பட்டிருக்கிறது. சீசர் எனும் அவ்விதைக்கு நீருற்றி வளர்த்ததில் மரபணுவியல் விஞ்ஞானத்திற்கும், தனக்கு கீழான விலங்குகள் என மனிதன் கருதும் ஜீவன்கள்மீது அவன் நிகழ்த்தும் அடக்குமுறையுடன் கூடிய வன்முறைக்கும் முக்கிய பங்கிருக்கிறது. பீர் வூலின் நாவலில் குரங்குகள் என்பது மனிதனின் மனதில் வாழும் மிருகத்தனமான உணர்ச்சிகளை குறிப்பதாகவும், அடக்குமுறை, வன்முறை, இன நிற துவேஷம் என்பன அவனை மனிதன் எனும் ஸ்தானத்திலிருந்து துரத்தி பரிணாம ஏணியில் அவன் மிருக குணங்கள் ஆதிக்கம் பெறுவதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

ரூப்பர்ட் வைய்யேட்டின் இயக்கத்தில் குரங்குகளின் எழுச்சியைவிட அவை மனிதனுடன் கொண்டிருக்கும் உறவே பிராதனப்படுத்தப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பரிசோதனக்காகவும், மிருககாட்சி சாலைகளில் காட்சிப் பொருளாகவும், சர்க்கஸுகளில் வித்தை காட்டும் மிருகமாகவும் சித்தரிக்கப்படும் குரங்குகள் சில வேளைகளில் மனிதர்களின் இல்லங்களில் செல்லப்பிராணிகளாகவும் இடம் பிடித்துக் கொள்கின்றன. அவ்வகையான வாய்ப்பு பெற்ற சீசரிற்கும் அவனை தன் வீட்டில் பராமரிக்கும் வில்லிற்கும், அல்ஸெய்மர் நோயால் பாதிக்கப்பட்ட வில்லின் தந்தை சார்ல்ஸிற்கும் இடையில் உருவாகும் பாசம் மிகுந்த உறவு படத்தின் பலம் வாய்ந்த அம்சமாகும்.

rise-of-the-planet-of-the-apes-2011-20170-634715338rise-of-the-planet-of-the-apes-2011-20170-153087889சிறு குட்டியாக வில்லின் வீடு வந்து சேரும் சீசர் அங்கு படிப்படியாக வளர்வதும், தன் தாய் வழியாக அவன் மரபணுவில் கடத்தப்பட்ட அலகுகள் வழி அவன் மூளை அறிவு விருத்தியில் வியக்கதகு எல்லைகளை தொடுவதும் ஒரு சிறு குழந்தையின் குறும்புகளை ரசிக்க வைக்கும் விதத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன. விஞ்ஞானி வில் இங்கு நோயால் பீதிக்கப்பட்ட தன் தந்தைக்கும், சீசரிற்கும் ஒரு தந்தையாக ஆகி விடுகிறான். மனதை தொட வைக்கும் காட்சிகளால் திரைப்படத்தின் இப்பகுதி ரசிகர் மனதை தொட்டுக் கொண்டே இருக்கிறது. சீசரின் அரவணைப்பும், அவன் தொடுதல்களும் பாசத்தின் நீட்சிகளாக மனதில் படர்கின்றன. சீசர் பாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக ஆக்கிரமிப்பது வில்லின் வீட்டில்தான்.

சீசர், வில்லையும், அவன் தந்தையும் தன் குடும்பமாக நினைத்துக் கொள்கிறான். அவன் தான் ஒரு சாதாரண வளர்ப்பு பிராணி அல்ல என்றே கருதுகிறான். இதனால்தான் தன் கழுத்துப் பட்டியை கழட்டி விட்டு வில்லின் காரில் பயணிகள் இருக்கையில் அவன் வந்து அமர்ந்து கொள்கிறான். வில்லின் தந்தைக்கு துன்பம் தரும் அயலவனையும் சீசர் தாக்குவது அவர்கள் தன் குடும்பம் எனும் எண்ணத்தினாலே ஒழிய வளர்ப்பு பிராணி காவலன் எனும் ஸ்தானத்தினால் அல்ல. தான் குடும்பத்தில் ஒருவன் என்பதை சீசர் நிரூபிக்கும் காட்சிகள் யாவும் மிகவும் உணர்ச்சிகரமாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் சீசர் அவன் வீட்டிற்குள்ளேயே இருக்க பணிக்கப்பட்டிருக்கிறான். சாளரம் ஒன்றின் வழியே அவன் வெளியுலகை, பரந்த உலகை எண்ணி ஏங்குவது உணர்த்தப்படுகிறது. வீடு ஒரு சிறை ஆனால் அன்பு நிறைந்த சிறை. பரந்த வெளியில் விருட்சங்களினூடாக தாவிப் பாயும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சீசர் தன்னை விடுவித்துக் கொள்கிறான். விருட்சங்களும், சுவர்கள் அற்ற வெளிகளும் அவனிற்கு பிடித்திருக்கின்றன. சாளரம் என்பது சீசரிற்கு அன்பான சிறையின் அடையாளம். அதனால்தான் தான் அடைக்கபபடும் கூண்டின் சுவரில் அவன் அன்பை வரைந்து கொள்கிறான். அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் கெடுபிடிகள் என்பவற்றின் நத்தை வேக நகரல் அவனிற்கு தன் இனத்தின் மீது மனிதன் காட்டி வரும் குரூரத்தை காட்டி விடுகிறது, தன் இனத்திற்கிடையில் நிலவும் வன்முறையின் பிடியை அனுபவிக்க செய்கிறது, தன் இனத்தை இதே நிலையில் தொடர்ந்தும் நீடிக்க விடக்கூடாது எனும் தீர்மானத்திற்கு சீசரை இட்டு வருகிறது. நம்பிக்கை ஒன்றின் முறிதலும், அவன் மனதில் எழும் சுதந்திர கனவும் அவனை தான் அடைபட்ட கூட்டில் அவன் வரைந்த சாளரத்தை அழிக்க செய்கின்றன. தமக்குரித்தான வீட்டை தாம் தேடிச் செல்ல வேண்டும் என்பதை அவனிற்கு உணர்த்திவிடுகின்றன. மனிதகுலத்துடன் இணைந்து வாழ்தல் என்பது தம் இயல்பிற்கு மாறானது என்பதை சீசர் உணர்வதுதான் எழுச்சியின் முதல் முளை.

la-planete-des-singes-les-origines-2011-20170-807017264சீசர் எனும் குரங்கு Motion Capture எனும் நுட்பத்தால் உருவாக்கப்பட்டாலும் அக்குரங்கின் நடிப்பிற்கு மூலமாக இருந்தவர் நடிகர் Andy Serkis. இணையத்தில் அவர் நடிப்பு எவ்வகையாக சீசராக பரிமாணம் பெற்றது என்பதை நீங்கள் பார்க்க முடியும். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். திரைப்படத்தின் சிறந்த நடிகர் ஆண்டி செர்கிஸ் எனும் சீசர்தான் என்பதில் ஐயமே இல்லை. அதே போல் நவீன தொழில் நுட்பத்தின் வழி உருவாக்கப்பட்டிருக்கும் குரங்குகள், அவைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் யாவும் வியக்க வைக்கின்றன. குரங்குகளை அடைத்து வைக்கும் நிலையத்தில் குரங்குகளினிடையே நிகழும் சம்பவங்கள் நல்ல ஆய்வின் பின்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. பபூனிற்கும் சீசரிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நகைச்சுவை கலந்து உருவாக்கபபட்டிருக்கின்றன.

திரைப்படத்தின் இறுதிப் பகுதியான குரங்குகளின் எழுச்சி, பரபரபிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. என்னை அக்காட்சிகள் பெரிதும் கவரவில்லை. ஆய்வுகூட அழிப்பு, வன்முறை என்பன திரைப்படத்தை வழமையான வசந்த வசூல் அள்ளி சூத்திரத்தினுள் தள்ளி விடுபவையாக அமைகின்றன. இவ்வளவு சிறிய இடைவெளியில் இவ்வகையான ஒரு சிறையுடைப்பை குரங்குகள் ஒருங்கமைக்க முடியுமா எனும் கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் மிக மென்மையான மனித உணர்வுகளை தழுவியணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் படத்தின் முன்னைய பகுதிகள் இத்திரைப்படத்தை ஒரு நல்ல அனுபவமாக மாற்றி அடிக்கின்றன. மனிதகுலத்தின் அழிவு மனிதனாலேயே என்பதாக படம் நிறைவு பெறுகிறது. ஆனால் சீசர் தன் இனத்துடன் தன் வீட்டிற்கு திரும்பி விடுகிறான். அழியப்போகும் மனிதகுலத்தை உயர்ந்த விருட்சமொன்றின் உச்சத்தில் நின்றவாறே அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். தன்னை கொல்ல வருபனையும் கொல்லத் தயங்கும் அவன் கண்கள் எம் கண்களுடன் இணைந்து கொள்கின்றன. [***]

Monday, August 8, 2011

சூப்பர் 8


லிலியான் எனும் புறநகரொன்றில் நிகழும் ரயில் விபத்தொன்றின் பின்பாக அந்த சிறிய நகரில் மர்மமான சில சம்பவங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. இச்சம்பவங்கள் அந்நகர மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைப்பவையாக அமைகின்றன. இந்த ரயில் விபத்தைக் குறித்த ஒரு ரகசியத்தை வெளியே விடாது காத்து வருகிறது ஒரு சிறார் குழு….

அமைதியான ஒரு புறநகர், சூட்டிகையான ஒரு நண்பர் குழு, துவிச்சக்கரவண்டி உலாக்கள், சிறு நகரை சல்லடை போட்டுத் தேடும் ராணுவம், இவற்றின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு மர்மம் போன்ற அம்சங்கள் Super 8 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இயக்கிய அருமையான படைப்பான E.T. யிலும் காணக்கிடைக்குமெனினும் சூப்பர் 8 திரைப்படமானது அதன் பார்வையாளர்களிற்கு வழங்கிடும் திரையனுபவம் அதனின்றும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.

சூப்பர் 8, திரைப்படத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அதன் இயக்குனர் J.J. Abrams திரையில் கொணர்ந்திருக்கும் மனித உறவுகள் குறித்த மென்மையான விபரிப்பு, உற்சாகம் துள்ளும் ஒரு சிறுவர் குழு அதன் நடவடிக்கைகள், இனிமையான பின்னனிப் பாடல்களுடன் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் 70களின் அந்திமம் என்பவற்றைக் கூறலாம்.

மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள் அற்ற திரைப்படத்தின் மர்மமுடிச்சுகூட ஒரு ஆறுதல் எனலாம். ஆனால் அந்த மர்மமுடிச்சை சூப்பர் 8ன் சிறப்புக்களில் ஒன்றாக கருத இயலாதவாறே அதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவு, நட்பு, காதல் எனும் பிரதான வீதிகளில் நகரும் கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திட அந்த மர்மமுடிச்சு இயக்குனரிற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதில் பிரம்மித்திட ஏதும் இல்லை. இயக்குனரின் பிரதான இலக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழத்தில் துயிலும் மென்மையான உணர்வுகளிற்கு தூண்டில் போடுவதாகவே அமைகிறது. அவரின் அத்தூண்டில் சரியாகவே வீசப்பட்டிருக்கிறது எனலாம். மாறாக மர்மமுடிச்சிற்கும் மனிதர்களிற்குமிடையில் இருக்ககூடிய உறவானது மனதை தொடும் ஒன்றாக திரைக்கதையில் உருவாக்கப்படவில்லை.

தனக்கான ஒரு இடத்தை நோக்கி திரும்பல் அல்லது வீடு செல்லல் என்பதனை திரைக்கதையின் இழைகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது சூப்பர் 8. திரைப்படத்தில் வரும் சிறுவன் ஜோ, சிறுமி ஆலிஸ் ஆகிய இருவரும் தம் அன்னையரை இழந்தவர்கள். ஜோவின் தாய், தொழிற்சாலை விபத்தொன்றில் பலியாகிவிடுகிறாள். ஆலிஸின் தாய் தன் குடிகாரக் கணவனுடன் வாழ விரும்பாது அவனை விட்டு விலகிச் சென்று விடுகிறாள். தாயன்பு வெறுமையான இரு வீடுகளில் வாழும் இரு சிறார்களாக இவ்விரு பாத்திரங்களும் கதையில் காட்டப்படுகிறார்கள்.

ஜோவிற்கும், ஆலிஸிற்கும் அவர்களின் தந்தைகளிற்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வின்மை என்பதன் அரூப சுவர்களை கொண்டதாகவே அவர்கள் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இச்சுவர்களுடனான மோதலே இவ்விரு சிறுவர்களையும் அச்சுவர்களிற்கு வெளியே அல்லது அச்சுவர்கள் மறையும் தருணத்தில் உற்சாகமாக இயங்க செய்கின்றன. தம்மிருவர் இடையேயும் ஒரு அந்தரங்க வெளியை உருவாக்க உந்துகின்றன.

super-8-2011-20233-1562492729இயக்குனர் ஏப்ராம்ஸ் இச்சிறார்கள் எதிர்கொள்ளும் வெறுமையான கணங்களையும், சிறுவர்களின் தந்தைகளிற்கும் சிறுவர்களிற்குமிடையில் உரையாட முடியாமல் துடிக்கும் பாசத்தையும், அக்கறையையும், இவ்விரு சிறார்களும் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் இடையில் முளைவிடும் ஈர்ப்பையும் மிகவும் அழகாக திரைப்படுத்தியிருக்கிறார்.

கனமான வெறுமை அழுத்தும் வீடுகளிலிருந்து விடுபட்டு நட்பையும், சாகசத்தையும், விருப்புடன் தேடி ஒடும் இந்த இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஈர்க்கப்படுவது என்பது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. தம் தந்தைகள் இடும் தடைகளைத் தாண்டியும் அவர்கள் தம் சந்திப்புக்களை தொடர்வதற்கு காரணம் அந்த சந்திப்பில் அவர்கள் உணரும் அன்பான ஒரு வெளியே. இந்த அன்பும் அக்கறையுமே இறுதியில் ஆலிஸை காப்பாற்றுவதற்காக ஜோவை ஓட வைக்கிறது. அதற்காக அவன் எதிர்கொள்ள வேண்டிய ஜீவன் அவன் உயிரை எடுத்துவிடலாம் என்பதை அவன் அறிந்தே தன் நண்பர்களுடன் ஆலிஸை தேடிச் செல்கிறான்.

இவ்வாறான ஒரு நண்பர் குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் குணாதிசயங்களுடன் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஏப்ராம்ஸ். அவர்கள் கூடும் போதெல்லாம் உற்சாகம் அங்கு கும்மியடிக்க ஆரம்பித்து விடுகிறது. சூப்பர் 8 கமெரா ஒன்றின் உதவியுடன் குறும்படத்தை இயக்கும் சார்ல்ஸ், வெடி நிபுணன் கேரி, குறும்படத்தில் டிடெக்டிவ் பாத்திரமேற்று நடிக்கும் மார்ட்டின் என ஒவ்வொருவரும் தனி ரகமாக சிரிக்க வைக்கிறார்கள். வயதிற்கு மீறிய உரையாடல்களை நிகழ்த்தி உயிரை வாங்கும் சிறுவர்கள் நிறைந்த படைப்புக்களில் இருந்து சூப்பர் 8 வேறுபடுவது ரசிகனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். இச்சிறார்களின் குடும்பங்கள் வழியேயும், நகரில் வாழும் மக்கள் வழியேயும் சிறிய புறநகர் சமூகமொன்றின் வேறுபட்ட மனநிலைகளையும் ஏப்ராம்ஸ் மெலிதாக காட்டியிருக்கிறார்.

திரைப்படம் நிறைவடைந்த பின்பாக சிறுவன் சார்லஸ் இயக்கிய திகில் குறும்படம் பார்வைக்கு வரும். அது அட்டகாசமான ஒரு அனுபவமாக அமையும். அதேபோல் சிறுமி ஆலிஸாக வேடமேற்றிருக்கும் Elle Fanning, சார்ல்ஸின் திரைப்பட காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் தன் துணைவனான டிடெக்டிவ்வை பிரிய மறுத்து உரையாற்றுமிடத்தில் அவர் முகத்தில் வந்துவிழும் உணர்வுகளின் தொகுப்பு அசர வைக்கிறது.

இழப்புக்களின் பின்பாகவும் வாழ்க்கையை தொடர்ந்திட வேண்டியதன் அவசியத்தையும், அன்பான உறவு மற்றும் நட்பின் பெறுமதிகளையும் வலியுறுத்துவதாக சூப்பர் 8 திரைப்படத்தின் இறுதிப்பகுதி அமைந்திருக்கிறது. நெருக்கடிகள் சில வேளைகளில் உறவுகளை எதிர்பாராத வகைகளில் புதுப்பித்து தருகின்றன. கையெட்டும் தூரத்தில் இருந்த பாசத்தை எட்டியணைக்கவும், ஆரத்தழுவிடவும் செய்கின்றன. தனக்கான ஒரு கூட்டை நோக்கி திரும்பும் எந்த ஜீவனும் அங்கிருக்கும் வெறுமைக்காக வேகம் காட்டுவதில்லை. தனக்கென அங்கிருக்கும் அன்பும், பாசமுமே அதன் வீடு திரும்பலை காலகாலத்திற்கும் இனிமையான ஒரு அனுபவமாக ஆக்ககூடும். ரசிகர்களின் மனதில் ஏக்கம் சுற்றிப் புதைத்திருந்த ஒரு ரகசியமான வீடு திரும்பலை மீண்டும் மேற்பரப்புகளிற்கு இட்டு வருவதிலும், அவர்கள் தம் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைப்பதிலும் சூப்பர் 8 சுபமாக வீடு திரும்பியிருக்கிறது. [**]

ட்ரெய்லர்

Friday, August 5, 2011

டீச்சரம்மா


வசதிபடைத்த ஆசாமி ஒருவனுடன் திருமண நிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட சிறுவர் பள்ளி ஆசிரியையான எலிசபெத் [Cameron Diaz], அவள் வகித்து வரும் ஆசிரியை பதவியை திருமணத்திற்காக ராஜினாமா செய்கிறாள். ஆனால் வசதி படைத்த அந்த ஆசாமியோ தன் பணத்தையே எலிசபெத் அன்பு செய்கிறாள் என்பதை கண்டு கொண்டு அவளுடனான தன் திருமண நிச்சயத்தை முறித்துக் கொள்கிறான்.

இந்த நிச்சய முறிவால், இன்னுமொரு வசதிபடைத்த ஆண் கிடைக்கும் வரையில் மீண்டும் தன் ஆசிரியைத் தொழிலை செய்யும் நிர்பந்தத்திற்குள்ளாகிறாள் எலிசபெத். தன் மார்புகளை பெரிதாக்கி கொள்வதும், பசையுள்ள பார்ட்டி ஒன்றை விரைவில் மடக்கி விடுவதும் அவள் மனதில் இருக்கும் மிக முக்கிய குறிக்கோள்கள் ஆகும். இவற்றிற்காக எந்த வழிமுறைகளிலும் இறங்க எலிசபெத் தயாராக இருக்கிறாள். ஆனால் எலிசபெத்தின் இந்த குறிக்கோள்கள் நிறைவேறுதற்கு ஒரு தடையாக வந்து சேர்கிறாள் அவளுடன் பணிபுரியும் சக ஆசிரியையான அமி…..

சற்றுக் கவர்ச்சியாக உடையணிந்து வரும் ஒரு ஆசிரியை. தன் வகுப்பு மாணவர்களிற்கு பாடங்களை நடாத்த விருப்பமின்றி அவர்களை வகுப்பறையில் திரைப்படங்களை பார்க்க செய்யும் ஒரு ஆசிரியை. வகுப்பறையில் தூக்கம் போடும் ஒரு ஆசிரியை. மது, போதைப் பொருள் போன்றவற்றை தன் வகுப்பறையிலேயே ரகசியமாக பதுக்கி வைத்திருக்கும் ஒரு ஆசிரியை. தன் மார்க்கச்சையை தன் மாணக்கனிடம் கழட்டி அன்பளிப்பாக தரும் ஒரு ஆசிரியை [ இதில் வக்கிரம் ஏதும் இல்லை என்றாலும்].

இப்படியான, சற்றே வயதான ஒரு கவர்ச்சி ஆசிரியையை ஒரு சிறுவர் பள்ளி நிர்வாகம் ஆசிரியப் பணியில் தொடர்ந்து நீடித்திருக்க அனுமதிக்குமா என எழும் கேள்வியை, கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் விமலா டீச்சர் + கணேசன் = டாய்லெட்டில் கிச்கிச் எனும் வரிகளை பிரின்ஸிபால் கணேசன் வேகமாக துடைத்துப் போடுவதைப்போல் நீங்கள் துடைத்துப் போட முடிந்தால் Jake Kasdan இயக்கியிருக்கும் Bad Teacher எனும் இப்படத்தை நீங்கள் தாராளமாக ரசித்திடலாம்.

bad-teacher-2011-17974-1875525872ஃபரெலி சகோதரர்கள் இயக்கிய There’s Something about Mary திரைப்படத்திற்கு பின்பாக இவ்வளவு மோசமான குணங்கள் கொண்ட ஆனால் ரசிக்க வைக்கும் ஒரு பாத்திரமாக பெரியம்மா கமரூன் டயஸை திரையில் காண்பதே அலாதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் க்ளோஸப் காட்சிகளை தவிர்த்தல் அவரிற்கும், அவர் ரசிகர்களிற்கும் எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றே நான் கருதுகிறேன். வாய் நிறையப் பொய், அண்டப் புளுகு, கெட்ட வார்த்தை, தன் மனதில் நினைப்பதை கன்னத்தில் அறைவதுபோல் சொல்லும் பண்பு என திரையில் அவரின் வயது உறுத்தலாக இருந்தாலும் ரசிகர்களை தான் ஏற்றிருக்கும் ஆசிரியை பாத்திரத்தை விரும்ப செய்து விடுவதில் உற்சாகாமான வெற்றி கமரூன் டயஸிற்கு வந்து சேர்கிறது. மிகவும் கொண்டாட்டமான உணர்வுடன் படத்தை நடித்துக் கொடுத்திருக்கிறார் பெரியம்மா.

தன் மார்புகளை பெரிதாக்க தேவைப்படும் பணத்திற்காக அவர் செய்யும் தில்லுமுல்லுகள், சக ஆசிரியனான ஸ்காட்டை தன் கவர்ச்சி வலையில் வீழ்த்த அவர் நிகழ்த்தும் சதிகள், வகுப்பறையில் தன் மாணக்கர்களிற்கு அவர் செய்யும் கொடுமைகள் என அவர் செய்திடும் எல்லாவற்றையும் சலிப்பின்றி ரசிக்க கூடியதாகவே இருக்கிறது. தன் மார்புகளை பெரிதாக்க விரும்பி சத்திர சிகிச்சை நிபுணரிடம் செல்லும் கமரூன் அங்கு ஒரு நங்கையின் ஒரு ஜோடி சத்திர சிகிச்சை மார்புகளை வருடி சாம்பிள் பார்ப்பது அவரின் ஜாலியான கெட்ட குணத்திற்கு ஒரு உதாரணம்.

நல்ல நாயகிக்கு ஏற்ற எதிர் நாயகியாக, கமரூன் டயஸிற்கு இத்திரைப்படத்தில் அருமையான ஒரு எதிர்பாத்திரமாக அமைகிறார் அமி எனும் சக ஆசிரியை வேடமேற்றிருக்கும் நடிகையான Lucy Punch. கமரூன் எவ்வளவிற்கு ஒரு கெட்ட ஆசிரியையாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு ஒரு முன்மாதிரியான நல்லாசிரியையாக இருக்கிறார் அமி. அந்தப் பாத்திரம் வரும் காட்சிகளில் எல்லாம் கமரூனின் ரசிகர்கள் மனதில் கிளர்ந்தெழும் அந்த மெலிதான எரிச்சலே போதும் நடிகை லுசி பன்ச்சின் திறமையை சொல்ல. கமரூனின் தில்லுமுல்லகள் குறித்து பிரின்ஸிபால் கணேசனிடம் போட்டுக் கொடுத்து கமரூனின் சீட்டைக் கிழித்து வீட்டிற்கு அனுப்ப அவர் முயலும் போதெல்லாம் அவரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கமரூன் மடக்க விரும்பிய ஸ்காட்டை தான் மடக்கிய பின் லுசி அடிக்கும் காதல் கூத்துக்களும், கமரூனிற்கும் அவரிற்குமிடையில் நிகழும் குளிரான மோதல்களும் வாய்விட்டுச் சிரிக்க வைப்பவை. லுசியின் நடிப்பு கமரூனை மேலும் ரசிக்க செய்கிறது என்றால் அது மிகையல்ல. மாறாக ஸ்காட் வேடத்தில் வரும் நடிகர் Justin Timberlake ன் பாத்திரம் ரசிகர்களிற்கு ஏமாற்றத்தை வழங்கும் ஒரு பாத்திரமாக அமைகிறது.

படம் நெடுகிலும் நன்றாக வாய்விட்டு சிரிக்ககூடிய காட்சிகள் கொண்ட, சலிப்பை தராத ஒரு திரைப்படமாகவே Bad Teacher அமைந்திருக்கிறது. இருப்பினும் பயங்கரமான ராவடிகளில் ஈடுபட்டு பின் தனக்கென ஒரு பொருத்தமான பாதையை கமரூன் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக படத்தை நிறைவு செய்வது அப்பாத்திரத்தைக் குலைப்பது போல் உள்ளதாக நான் உணர்கிறேன். இத்திரைப்படம் ஒரு தரமான காமெடியா…இல்லை. புத்திசாலித்தனமான காமெடியா…. இல்லை. இத்திரைப்படம் உலகிலுள்ள அக்மார்க் ஜொள்ளு ஜமீந்தார்களிற்கு என அளவு எடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு. Bad Teacher கையில் சிக்கிய ஜொள்ளு ஜமீந்தார்கள் ஏமாற வாய்ப்பில்லை. [**]

ட்ரெய்லர்

Thursday, August 4, 2011

கோளியா கொக்கா


கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர் வினை.

cockraj1கடந்த சில தினங்களாக மிகுந்த மனவுளைச்சலிற்கு உள்ளான ஒருவனாக நான் மாறியிருக்கிறேன். நம் லோக்கல் வைரம் கோயாவி, லோக்கல் கோமேதகம் வவ்வாலான் சாகசக் கதைகளின் சூப்பர் ஹிட் வெற்றி என்பது என் மனதிற்கு பெருமகிழ்ச்சியை தந்தாலும், சமகாலத்தின் சாபமும் வரமுமான இணைய தொழில்நுட்பத்தின் துணையுடன் சில விஷமிகள் கோளிக் காமிக்ஸ் குறித்து அரங்கேற்றும் மலிவு நாடகமும், ஒரு லோக்கல் காமிக்ஸ் இதழ் மீது குறிவைத்து கண்மூடித்தனமாக வீசப்படும் ஈனத்தனமான பல்தேசிய அதிகாரங்களின் அடக்குமுறை கணைகளும் என்னை சீறத் தயாராகிவிட்ட ஒரு எரிமலையாக உருவாக்கிவிட்டிருக்கிறது.

எமது முகவர்களிடம் இருந்து வரும் தகவல்கள் ஆனந்தத்தையும், வேதனையும் எமக்கு ஒருங்கே அளிப்பவையாகவே உள்ளன. காமிக்ஸ் இதழ்கள் தீர்ந்து போனதன் பின்பாக முகவர்களை தேடி வரும் அன்பு வாசகர்கள், இதழ்கள் தீர்ந்துபோன ஏமாற்றத்தினை தாங்கிக் கொள்ளவியலாத நிலையில் முகவர்களின் மீதான கட்டற்ற வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள்.

இவ்வன்முறையானது உலகின் பல மூலைகளிலும் ஒரு பொல்லாத தொற்றுநோய் போல பரவியிருப்பதையே மருத்துவமனைகளில் இருந்து தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பாடல் வழியாக வலியுடன் ஒலிக்கும் எம் முகவர்களின் குரல்கள் தெளிவான ஒரு காமிக்ஸ் பக்கம் போல் எமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. வன்முறையால் மட்டுமே சிக்கல்களிற்கு உடனடித் தீர்வு கண்டடையப்படக்கூடும் எனும் இன்றைய காலகட்டத்தின் மோசமான புரையேறி கருத்தாக்கம் எம் சமூகத்தை வெகுவாக பாதித்திருப்பதை நாம் இன்னமும் மறுத்துக் கொண்டிருக்க முடியாது.

kcom 1எமது காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும் தருணங்களில் தவறாமல் அதற்கான அறிவிப்புக்களை நாம் முன்கூட்டியே வழங்கி வருகிறோம். ஒரு லோக்கல் காமிக்ஸ் என்ற வகையில் அதன் ஆசிரியன் என்ற நிலையில் இதையிட்டு நான் பெருமைபட்டுக் கொள்வதில் நாணப்படப் போவதில்லை. ஆனால் உங்கள் செயல்வேகமே நீங்கள் கோளிக் காமிக்ஸை கையகப்படுத்துவதை தீர்மானிக்கும் முக்கிய காரணி என்பதை தீட்சண்யமாக நீங்கள் உங்கள் நினைவில் இருத்திக் கொள்ளல் வேண்டும். வேகமற்ற வேங்கை வேங்கையாக இருக்க முடியாது வேண்டுமானால் அது ஒரு கொங்கையாக நீடித்திடலாம். கடந்தவாரம் எம் முகவர்களின் மீது ஜமைக்காவில் இடம்பெற்ற வன்முறையில் இறங்கிய ஒருவரின் பெயர் உசைன் போல்ட் என்பதை இங்கு எழுதி செல்ல விரும்புகிறேன்.

எம் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இதழ்கள் அவர்கள் கைக்கு கிட்டாமல் போகும் ஏமாற்றத்தின் வலியை வன்முறை அலையாக உருமாற்ற கூடாது என்று அவர்களிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் உள்ளத்தில் வன்முறை கொப்புளிக்க ஆரம்பிக்கும் தருணங்களில் நீங்கள் காந்தி, மார்ட்டின் லூதர் கிங், டொமினிக் ஸ்ட்ராஸ்கான் போன்றவர்களை உங்கள் மனத்திரையில் ஒரு அழகான கறையாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என உங்களை நான் அன்புடன் வேண்டி நிற்கிறேன். முகவர்களை தாக்குவதை தயவுசெய்து நிறுத்துங்கள். நீங்களே ஒரு முகவராகி விடுங்கள். நீங்கள் விரும்பும் இதழ்கள் உங்களிற்கு தவறாமல் கிடைக்க இதைவிட வேறு என்ன சிறப்பான வழி இருக்க முடியும். ஆனால் எதற்கும் ஜூடோ பழகிக் கொள்ளுங்கள். நீங்களும் முகவராகலாம் எனும் தலைப்பில் இதற்கான விபரங்கள் அடுத்த இதழின் 69ம் பக்கத்தில் வெளியாக உள்ளது என்பதை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.

vavalanவானதுர்கா பதிப்பகத்தின் ஓயாத பெருங்குரல் கோளிக் காமிக்ஸ் வெளியீடுகள் வருங்காலத்தில் சர்வதேச சந்தையில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களின் முன்சங்கொலியாகவே என் காதுகளில் ஒலிக்கிறது. பல போலிப் பெயர்களிலும், அடையாளங்களிலும் அந்த ஐரோப்பிய பதிப்பகம் ஒரு குடிசைத் தொழிலிற்கு ஒப்பிடக்கூடிய நிலையில் இன்று இருக்கும் கோளிக் காமிக்ஸ் மீது நடாத்தும் அபாண்டமான தாக்குதல்களும், எந்தவிதமான ஆதாரங்களுமற்ற பிரச்சாரங்களும், வழங்கும் மூலக்கதையின் விபரங்களும், இணையத்தில் அவற்றைக் கண்டடையக்கூடிய முகவரிகளும் எம் வெளியீடுகள் மீது அவர்கள் கொண்டுள்ள அச்சத்தையே காட்டுகிறது. வானதுர்கா பதிப்பகம் சில ஐரோப்பிய காமிக்ஸ்களுடன் என்னை பிராங்ஃபர்ட் விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய மேற்கொண்ட முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது அவர்கள் அடிவயிற்றில் விழுந்த ஒரு பலமான உதையாகவே இன்று அவர்களால் உணரப்படும். இருப்பினும் பெருநிறுவனமான வானதுர்காவின் லாபியிங் காரணமாக ஐரோப்பாவில் கோளிக் காமிக்ஸ் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமான ஒரு செய்தியே.

ஆனாலும் இவ்வகையான தடைகளையும் மீறி ஐரோப்பிய கறுப்பு சந்தையில் கோளிக் காமிக்ஸ் தங்கு தடையின்றிப் புழங்குவதற்கு நான் தக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். இதனால் கோளிக் காமிக்ஸிற்கு கிடைக்ககூடிய அவப்பெயரை வாசகர்களின் அபாரமான வரவேற்பு சுத்தமாக துடைத்துப் போட்டுவிடும் என நான் எண்ணுகிறேன். கள்ளக் காமிக்ஸ் கொக்ராஜ் என சரித்திரம் அதன் வரிகளில் என்னை நினைவுகூரட்டும்.

pvppநோர்வே உளவுத்துறையில் இருந்து என்னை வந்து சந்தித்த அதிகாரி ஒருவர், தலைகீழாக ஒரு தம் பீடி கதையில் இடம்பெற்றதைப் போலவே அண்மையில் தம் நாட்டை ஒரு நிகழ்ச்சி கலக்கிப் போட்டதை சுட்டிக் காட்டி நோர்வேயைச் சேர்ந்த சில ரகசிய அமைப்புக்களுடன் எனக்கு தொடர்பிருக்கிறதா என அறிய முயன்றார். ஆர்ஜெண்டினாவில் இரு பிரெஞ்சு பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக [ பாலியல் வன்கலவிக்கு பின்பாக] கொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சு அசலாக பாலைவனத்தில் பத்மா! பத்மா! கதையில் வரும் காட்சியை ஒத்திருப்பதாக கூறி பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஒரு நாள் முழுதாக என்னை வறுத்தெடுத்தார்கள். பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதையில் தனக்கு பீடியை கடன் தர மறுக்கும் பொட்டிக்கடை பாஸை பார்த்து கோயாவி சீற்றத்துடன் கூறும் வரிகளான “ஆனானப்பட்ட அமெரிக்காவே கடனில் நொடிந்து போகும் நாள் தொலைவில் இல்லை” என்பது குறித்த ஒரு நீண்ட விளக்கத்தை நான் அமெரிக்க அதிகாரத்திற்கு அளிக்க வேண்டியிருந்தது. வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகள் மேட் இன் சைனா என தெரிய வந்ததிலிருந்து சீனாவில் கோளிக் காமிக்ஸ் தடை செய்யப்பட்ட இதழாகியிருக்கிறது. ஆனால் வவ்வாலான் அணியும் டைட்டான ஆடைகளின் ஏற்றுமதியை அந்நாடு தடை செய்யவில்லை!

இவ்வாறான பல்முகசிக்கல்களிற்கு முகம் கொடுக்கும் ஒரு ஏழைக் காமிக்ஸ் எடிட்டரின் தொழில் வாழ்க்கையின் ஒரு நாளை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். சில வேளைகளில் காமிக்ஸ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு போர்னோ துறையில் இறங்கிவிடலாமா என்றுகூட பயங்கரமான சிந்தனைக் குட்டைகளிற்குள் நான் வீழ்ந்து போயிருக்கிறேன். இருப்பினும் உலகெங்கும் உங்கள் கைகளில் கோளிக் காமிக்ஸ் எனும் என் இலட்சிய தாகம் தீரும்வரை போராடுவது என தீர்மானித்திருக்கிறேன். புரட்சியின் விதை நிலத்தில் விழும்போது அது புரட்சியின் விதை என்பது யாரிற்கும் தெரிந்திருப்பதில்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

palivankumarkidஇவ்வகையான சர்வதேச அழுத்தங்களின் கொடூரப்பிடியில் நெருக்கப்பட்டிருக்கும் எனக்கு கோளிக் காமிக்ஸ் வெளியீடான பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டின் முன் அட்டை ஸ்கேன், கோளிக் காமிக்ஸின் கோமேதகம் வவ்வாலனின் பெயர் போன்றவற்றை என் அனுமதி இன்றி பிரசுரித்ததோடு மட்டுமில்லாது சர்வதேச பரிசு வழங்கி விடுவார்கள் என என் வெளியீட்டைக் கிண்டலும் அடித்து கொக்ராஜ் செய்வதை செய்து கொள்ளட்டும் என சவடால் விட்டிருக்கும் அந்தப் பாஸிசப் பதிவரை நினைத்தால் பரிதாபமாகவே இருக்கிறது. வானதுர்கா பதிப்பகத்திற்கு மிக நெருங்கிய அப்பாஸிசப் பதிவரிடமிருந்து இதைவிட நான் வேறு எந்த தரத்திலும் ரசனையிலும் கருத்துக்களை எதிர்பார்த்திட முடியும். அந்த வானதுர்கா பாஸிச சொம்பர் கால்விரல்களால் பதிவெழுதி சாதனை படைக்கும் நாள் வெகு அருகிலேயே உள்ளது என்பதை இக்கணத்தில் அவரிற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மிகத் தந்திரமாக அப்பாஸிசப் பதிவர் சொல்லாமல் சென்ற விடயம் என்னவெனில் பழிவாங்கும் ஆர்க்கிட் எனும் வரவிருக்கும் எம் கதையின் தலைப்பை சீனக் கணணி வல்லுனர்களின் உதவியுடன் தெரிந்து கொண்டு அதனை தன் சமீபத்திய பதிவின் தலைப்பாக இட்டிருக்கிறார் என்பதுதான். சாகஸ மங்கை செக்ஸி குயின் சக்கி, தன் கணவன் மரணத்திற்கு காரணமானவர்களை நவீன முறைகளில் பழிவாங்கிடும் கதைதான் பழிவாங்கும் ஆர்க்கிட். கோளிக் காமிக்ஸ் ரசிகர்களை பல கோணங்களில் இக்கதை திருப்திப்படுத்தும் என்பதை இப்போதே என்னால் உறுதியாக கூறமுடியும். இதேவேளையில் என்னை மீண்டும் மீண்டும் சீண்டும் மிகையதிகாரங்களிற்கும், வான்துர்காவின் வாய்தா பதிவரிற்கும் நான் கூறிக்கொள்வது இது ஒன்றுதான், உலைமூடியை வைத்து எரிமலையை மூட முடியாது. ஐ வில் வி பேக்.

பி.கு: நாளை பேஸ்புக்கின் தமிழ் காமிக்ஸ் குழும முகவரியில் சூடாக வெளியாக இருக்கும் கோளிக் காமிக்ஸ் எடிட்டரு அய்யா மேன்மைதகு கொக்ராஜ் அவர்களின் சூட்டாம் வரி எதிர்வினை இன்றே சீன கணனி வல்லுனர்கள் உதவியால் வானதுர்கா பாஸிச சொம்பரால் இங்கு பிரசுரமாகி உள்ளது. இந்த முயற்சியில் உதவிட்ட குத்து டைம்ஸுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

Wednesday, August 3, 2011

பழிவாங்கும் ஆர்க்கிட்


முன்பொரு காலத்தில் நான் சிறுவனாக இருந்தபோது கண்டுகளித்த சில திரைப்படங்களில், தன் குடும்பத்தை பூண்டோடு அழித்த கொடியவர்களை பிரதான பாத்திரங்கள் எவ்வழியிலாவது பழிவாங்கிவிடுவது என்பது மிகவும் முக்கியமானவொரு அம்சமாக இடம்பெற்றிருந்தது.

கதையின் நாயகன் அல்லது நாயகியின் அன்பு உறவுகள் கொடியவர்களால் கறுப்பு வெள்ளையில் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க, இந்த நாயகனோ அல்லது நாயகியோ ஒரு பொட்டியின் அல்லது அருகில் இருக்கும் மர்ம அறையொன்றின் சாவித்துவாரம் வழியாகவோ, அல்லது கட்டிலின் கீழிருந்தோ[…அய்யய்யோ மெத்தை பையன் தலைல முட்டிடப் போகுதே மாரியாத்தா காப்பாற்றும்மா…..] அல்லது வைக்கோல் போரிற்குள் மறைந்திருந்தோ தங்கள் உறவுகளின் கொடூரமான முடிவை பயம், கண்ணீர், கிளிசரின்,பரிதாபம், கையாலாகமை என்பன தம் முகத்தில் தாண்டவமாடிட பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த கொடிய செயலில் ஈடுபட்ட நீசர்களை நயகனோ நாயகியோ அல்லது திரையரங்கில் வீற்றிருக்கும் ரசிகர்களோ எதிர்காலத்தில் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் சில அடையாளங்கள் அந்த நீசர்களிற்கு வழங்கப்படிருக்கும். மண்டையோடு பச்சை, முகத்தின் குறுக்கே ரயில் தண்டவாளம் போல் ஒரு தழும்பு, ஓநாய் தலையை பூணாக கொண்ட ஒரு கைத்தடி என்பன இவ்வகையான அடையாளங்களிற்கு சில உதாரணங்களாகும். ஜாலியாக தம் வாழ்வை கழித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அடையாளங்கள் பழிவாங்குதல் எனும் கடமையை நாயகன் அல்லது நாயகிக்கு நினைவூட்டும். அவர்களும் தம் கடமையை ஆற்ற புறப்படுவார்கள். அரங்கில் விசிலடியும், பலகை இருக்கைகளின் தட்டலும் பட்டையைக் கிளப்பும்.

நல்ல வேளையாக Olivier Megaton இயக்கியிருக்கும் Colombiana எனும் திரைப்படத்தில் சிறுமி Cataleya வின் குடும்பத்தை அவள் கண்கள் முன்பாகவே அழித்தொழிக்கும் கொடியவர்களிற்கு மேற்கூறப்பட்ட சிறப்படையாளங்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அந்தக் கொடியவர்களின் பிடியிலிருந்து தப்பி அமெரிக்கா வந்தடைந்து, ஆளாகி, கறுப்பு ஆர்க்கிட்டாக பூத்து நின்ற போதிலும் கத்தலியாவின் மனதில் அந்தக் கொடியவர்களின் முகம் மறைந்திடவில்லை. துரதிர்ஷ்டவசமாக இதுமட்டுமே இத்திரைப்படத்தின் ஆறுதலான ஒரு அம்சம்.

மனிதர்கள் அறிந்தும் தவறு செய்பவர்களே. ஆனால் இத்திரைப்படம் ஆரம்பமாகும்வரை நான் அறியாமல் ஒரு தவறு செய்வது எனக்கு தெரிந்திருக்கவில்லை. வழமையான விளம்பரங்கள் ஓடித் தீர திரைப்படம் ஆரம்பமாகி இத்திரைப்படம் Europa Corp தயாரிப்பு என்பது தெரியவந்தபோது என் அடிவயிற்றில் பகீரொன்றின் ப உருப்பெற ஆரம்பித்திருந்தது.

colombiana-2011-20332-1345479037இயூரோபா கார்ப் தயாரிப்பாக இருந்தாலும் சிலவேளைகளில் அந்த நபர், திரைக்கதை, வசனம் எழுதாத திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் உண்டு என மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் திரைக்கதைக்கு பொறுப்பாக அந்த நபரின் பெயரும் வந்து திரையில் விழுந்தபோது ஏற்கனவே உருப்பெற்ற ப வுடன் கீரும் முழுமை பெற்று சேர்ந்து கொண்டது. அடக் கடவுளே என மனதில் எண்ணிக் கொண்டேன். யார் சொன்னது கடவுளிற்கு காது கேட்பதில்லை என!!

1- கொலம்பியா: சிறுமி கத்தலியாவின் குடும்பத்தை அழிக்க அவள் வீட்டிற்கு வருகிறது முரடர் படை. அவர்களிடமிருந்து கத்தலியா தப்பி ஓடுகிறாள், முரடர்கள் துப்பாக்கியால் அவளை நோக்கி தாறுமாறாக சுடுகிறார்கள். அப்போது முரடர்களின் தலையான மார்கோ கூறுகிறான் சூடாதீங்கடா, அவ எனக்கு உயிரோட வேணும்… இந்த துரத்தல் முடிவிற்கு வருகையில் சிறுமி கத்தலியா பாதாள சாக்கடை ஒன்றினுள் புகுந்துவிட அவளை நோக்கி தன் துப்பாக்கியால் சராமாரியாக சுட ஆரம்பிப்பது மேற்கூறிய அறிவுறுத்தலை தந்த அதே மார்கோதான்.

2- அமெரிக்கா: பொலிஸ் கார் ஒன்றின் மீது வேகமாக வரும் ஒரு கார் மோதுகிறது. மோதியது ஒரு பெண். மிகையான போதை. ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸ்நிலையத்தில் அப்பெண் தடுத்து வைக்கப்படுகிறாள். அப்பெண்ணின் மிகை போதையை தெளிவிப்பதற்காக அவளிற்கு காப்பி!!!! வழங்கச் சொல்கிறார் பொலிஸ் அதிகாரி. அப்பெண்ணிற்கு ஒரு கிண்ணத்தில் காப்பி எடுத்துச் செல்லும் ஒரு பெண் பொலிஸ், அக்கிண்ணத்தை காப்பி கலக்கிய உலோகக் கரண்டியுடனே!!!! காவல் அறை கதவின் மீது வைத்து விட்டு அசால்ட்டாக திரும்புகிறார்.

மேலே எழுதிய இரண்டும் சிறு உதாரணங்களே. பக்கம் பக்கமாக எழுத படத்தில் உதாரணங்கள் இருக்கிறது. Luc Besson திருந்தவே போவதில்லை, ரசிகர்களை மடச் சாம்பிராணிகளாகவே எண்ணிக்கொண்டு அவர் எழுதி வழங்கும் படைப்புகள் வருடத்திற்கு வருடம் மேலும் தரம் கெட்டவையாகவே உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆக்‌ஷன் படத்தில் எதற்கு தர்க்கரீதியான சம்பவங்களை நான் தேட வேண்டும் எனும் கேள்வியை நான் கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால் இத்திரைப்படத்துடன் ஒப்பிட்டால் பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு கதைக்கு ஏதாவது சர்வதேச விருதை வழங்கி விடுவார்களோ எனும் பயம் உருவாகி இருக்கிறது.

kcom 1அவதார் எனும் படத்தில் நீலப்பூச்சு பூசி நடித்த நடிகையான Zoe Saldana இப்படத்தில் நீலப்பூச்சின்றி கத்தலியாக வேடமேற்றிருக்கிறார். Cattleya எனும் ஆர்க்கிடு வகையின் பெயரை தழுவி கத்தலியாவின் பெயர் உருவாக்கப்பட்டதாம். தன் பழிவாங்கும் ஆட்டத்தில் கத்தலியா மேற்குறித்த ஆர்க்கிட்டினை ஒரு அடையாளமாக வரைவாராம் அல்லது விட்டுச் செல்வாராம். நடிகை ஸோவே சல்டானாவிற்கு அதிரடியான இந்த ஒப்பந்தக் கொலைகாரி பாத்திரம் பொருந்தவேயில்லை. அவர் அடிதடிகளில் இறங்கும்போது இரக்கம்தான் வருகிறது. குளியல் காட்சியில் அவர் கரங்களிற்கு சோப்பு போடுவதை தெளிவாக காட்டுகிறார்கள். ஆனால் அவர் மார்புகள் சிறிதானவை என்பதை ரசிகர்கள் அறிந்து கொள்ள அவர் அனுமதித்திருக்கிறார். சிக்காகோவில் இருக்கும் கத்தலியாவின் மாமாவாக வரும் நடிகர் Cliff Curtis க்கு ராபர்ட் டிநீரோ போல நடிக்க வேண்டும் எனும் விபரீத ஆசை ஏற்பட அந்த ஆசையை இத்திரைப்படத்தில் நிறைவேற்றியிருக்கிறார். வேதனையான முகபாவம் காட்டும் ராபார்ட் டிநீரோவின் முகத்தில் முட்டைத்தோசை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது க்ளிஃப் கர்ட்டிஸின் நடிப்பு.

சரி படத்தில் புதிதாக ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தால், கொலம்பியப் பவேலாக்களின் கூரை உச்சிகள் வழியே நடக்கும் துரத்தலில் Yamakasi, அமெரிக்கா வரும் கத்தலியா தான் ஒரு கொலைகாரியாக வேண்டும் என தன் மாமாவிடம் கேட்கையில் Léon, உறவுகளை விலத்தி தனியே வாழும் ஒப்பந்தக் கொலைகாரி ஒருத்தியின் வாழ்க்கை முறை, உளவியல்! அவளின் விசித்திரமான காதல்!!! போன்றவற்றில் Nikita என லுக் பெசனின் பழைய படைப்புக்களின் நிழல்கள் கொலம்பியான திரைப்படத்தில் நிழல் நடனம் புரிகின்றன. இப்படி ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தக் கொலைகாரியை லுக் பெசனால் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்கு அவளின் அந்த விசித்திரமான காதலே சான்று. லுக் பெசன் படித்த கடைசி க்ரைம் நாவல் பாங்காக்கில் தமிழ்வாணானாக இருக்குமோ எனும் சந்தேகம் எழாமல் இருக்க முடியுமா என்ன.

ஹாலிவூட் மகாராஜாக்கள் வழங்கும் அதிரடி ஆக்‌ஷன்களைப்போல் தன் படைப்புக்கள் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக முயலும் லுக் பெசன் இப்படத்திற்கு எழுதியிருக்கும் வசனங்கள் அமெச்சூர் நாடக வசனங்கள் போலிருக்கின்றன. ஆனால் லுக் பெசன் ஓய மாட்டார். உலகெங்கிலும் சூப்பர் ஹிட்டாகும் ஒரு அதிரடி ஆக்‌ஷனை தரும் வரையில் அவர் கற்பனை நதி நிற்கப்போவதில்லை, அந்த வேட்கை அவரை தன் கைக்குள் வைத்து விபரீத விளையாட்டு காட்டியபடியே இருக்கும். நான்தான் அவதானமாகவும் ஜாக்ரதையாகவும் இருக்க வேண்டும். வவ்வாலான் மட்டும் லுக் பெசனை கடத்திச் சென்று கண்காணா இடத்தில் மறைத்து வைத்தால் அவரிற்கு மேட் இன் சைனா ஹிட் சூட் ஒன்றை நான் வாங்கிப் பரிசளிப்பேன். வஞ்சம் அழகானது என்பதால் நான் கண்ணை மூடிக் கொண்டு இருக்க இயலுமா. வேட்டைக்காரன், வேங்கை வகையான திரைப்படங்களை எள்ளி நகையாடும் முன் கொஞ்சம் கொலம்பியானா பாருங்கள் ராஜாக்களே.

பி.கு: பாட்டு வாத்தியாரைக் கடத்திய பறக்கும் தட்டு ஸ்கேன், வவ்வாலன் பெயர் போன்றவற்றின் உபயோகத்திற்கு கோளிக் காமிக்ஸ் எடிட்டரு கொக்ராஜிடம் நான் அனுமதி பெறவில்லை அவர் செய்வதை செய்து கொள்ளட்டும்.

ட்ரெய்லருங்கோ